கள்ளக்குறிச்சி மாணவி உடலை தூக்கிச் செல்வதுபோல வெளியான பரபர சிசிடிவி காட்சிகள் போலி! தாய் திட்டவட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக புதிய திருப்பமாக, மாணவியின் உடலை நான்கு பெண்கள் தூக்கிக்கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் பொய்யானவை என மாணவியின் தாய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் படித்த மாணவி ஒருவர், கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளி வாகனங்கள், பள்ளியில் இருந்த சான்றிதழ்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. மேலும், கலவரக்காரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கியதோடு, அவர்களின் வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை
தமிழகத்தையே உலுக்கிய இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், வீடியோ ஆதாரங்களை கொண்டும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் கலவரத்தில் கைது செய்து வருகின்றனர். வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் வீடியோ, கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றையும், போராட்டக்காரர்கள் விட்டுச்சென்ற வாகனங்களில் உள்ள பதிவெண் ஆகியவற்றை கொண்டு, போராட்டக்காரர்களை அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு
இந்நிலையில், இந்த வழக்கின் புதிய திருப்பமாக, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பில் புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. அந்த சிசிடிவி காட்சியில், பள்ளியின் விடுதியில் கீழே விழுந்ததாக கூறப்படும் இடத்திலிருந்து மாணவி உடலை, நான்கு பெண்கள் தூக்கிக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த காட்சி வெளியாகியதை தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் தரப்பிலிருந்து, சந்தேகங்களும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாணவியின் தாய் மறுப்பு
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சி, மாணவியின் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து மாணவியின் தாய் கூறியதாவாது : இந்த சிசிடிவி காட்சிகள் பொய்யானவை. இதுபோன்ற காட்சிகளை யார் வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு அப்பட்டமான பொய் சிசிடிவி பதிவு. தங்கள் மகளது உடல் முழுக்க இரத்தம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது, ஆனால், விழுந்ததாக காண்பிக்கப்பட்ட இடத்தில் ஒரு துளி இரத்தம் இல்லை. இது ஒரு ஜோடிக்கப்பட்ட வீடியோ காட்சி என்று மாணவியின் தாய் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகளால் சலசலப்பு
உயிரிழந்த மாணவியின் இரண்டாவது உடல் கூராய்வு அறிக்கை, ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் இதுபோன்ற வீடியோ காட்சிகள் அவ்வப்போது வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications