தங்கத் தேரில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - வீடியோ
அழகர்கோயிலில் இருந்து கிளம்பிய கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி தங்கத்தேரில் இன்று காலை 6.30 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கிய வைபவம் நடந்தது. சித்திரை திருவிழாவால் மதுரையே விழாக்கோலத்தில் உள்ளது.
மதுரை: உலகபிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் இன்று காலை பச்சை பட்டுடுத்தி தங்கத் தேரில் பவனி வந்து வைகை ஆற்றில் இறங்கினார். அதனை பல லட்சம் பகதர்கள் பக்தியுடன் கண்டு களித்தனர்.
மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை திருவிழா உலகப் புகழ்பெற்றது. அதிலும் மீனாட்சி திருக்கல்யாணமும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் வரலாற்று சிறப்புடையது. இந்த சித்திரை திருவிழா நாட்களில் மதுரை மாநகர் பெரும் விழா கோலம் பூண்டிருக்கும்.
அழகர் கோயில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் வழிதோறும் இருக்கும் மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு காட்சி தந்து மதுரையை வந்தடைந்தார். அங்கிருந்து தங்கத் தேரில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இன்று காலை 6.30 மணிக்கு இறங்கினார்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் கட்சியைக் காண வந்திருந்த பல லட்சம் பக்தர்கள், 'கோவிந்தா' என நாமம் சொல்ல கள்ளழகர் ஆற்றிலிறங்கியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
ஆனால் இந்தாண்டு வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அழகர் நீர் நிரம்பிய ஒரு தொட்டிக்குள் இறங்கினார். பல லட்சக்கணகான பக்தர்கள் திரண்டிருந்த காரணத்தால் மதுரையில் 5000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.