கமலஹாசன் - கெஜ்ரிவால் சந்திப்பு... தேசிய அரசியலுக்குள் கமல்?
தமிழக அரசியல் தன்னைச் சுற்றி வரும் வகையில் ஆக்கபூர்வமாக திட்டமிட்டு அரசியல் செய்தவர் மு.கருணாநிதி.
பத்திரிகை, வானொலி என தகவல் தொடர்பு குறுகிய வட்டத்துக்குள் இருந்த காலங்களில் அனல் பறக்கும் அரசியல் சம்பவங்களை அரங்கேற்றி தமிழகம் தன்னை பற்றி பேச வைத்த அதிபுத்திசாலி அரசியல்வாதி கருணாநிதி.
அவரால் கலைஞானி என்று அழைக்கப்பட்ட நடிகர் கமல் ஹாசன் கருணாநிதி பாணியை கடைபிடிக்க தொடங்கி விட்டார் என்றே மதிப்பிட வேண்டியிருக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக கமல் டிவிட் செய்த போது அரசியல்வாதிகளும், சினிமாகாரர்களும் விருமாண்டி கமலஹாசனாக பார்த்தார்கள்.
அடுத்தடுத்து தமிழக அரசியல் கூத்துக்களை கிண்டலடித்து, வேதனை தெரிவித்து கமல் அனல் கக்கும் பதிவுகள் செய்த போது அதற்கு பதில் சொல்வதற்கே தமிழக அரசு சில மந்திரிகளை நியமித்த கூத்து நடந்தது
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவாரா, வர மாட்டாரா என்கிற விவாதம் அதிமுக - திமுக வட்டத்தில் தீவிரம் அடைந்துள்ளது. கமல் இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி முதன் நிலை அரசியல் களத்தை நோக்கி வந்து விட்டார்.
தனக்கு இருக்கும் சினிமா பிரபலத்தை சமூகத்தில் தன் கருத்துகள் விரைவில் மக்களை சென்றடைய பயன்படுத்த தொடங்கி விட்டார். ஜனவரியில் நடைபெற்ற ஜல்லிகட்டு போராட்டம் முதல் அரசியல் விமர்சனம் செய்வதில் தீவிரம் காட்டி வரும் கமல் ஹாசன் பொது நிகழ்ச்சி, விழாக்களில் தெரிவிக்கும் கருத்துகள் மீடியாக்களால் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.
சமீபத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் ஓணம் பண்டிகையையொட்டி கமலை விருந்தினராக அழைத்திருந்தார். அது சம்பந்தமாக கருத்து தெரிவித்த கமல் அரசியல் பாடம் படிக்க கேரள முதல்வரை சந்தித்தேன் என்றார்.
தமிழகத்தில் தன் தலைமையை எந்த ஒரு அரசியல் கட்சியும் ஏற்காது என்பது தெரிந்தும் - தனி அரசியல் கட்சி தொடங்குவதில் கமல் தீவிரம் காட்டவில்லை.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி யூனியன் பிரதேச முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கமல் ஹாசனை சந்திப்பதற்காக டெல்லியில் இருந்து சென்னை வந்தது தேசிய அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாநில எல்லைக்குள் கமல் இருந்து விடுவார் என எண்ணிய தேசிய கட்சிகளுக்கும், மக்களுக்கும் தான் தேசிய அளவில் அரசியல் செய்ய தயாராகி விட்டதை கெஜ்ரிவால் சந்திப்பு மூலம் உணர்த்தியிருக்கிறார்.
கெஜ்ரிவால் - கமல் சந்திப்பு முடிந்து பத்திரிகையாளர்களிடம் இருவரும் பேசியபோது ஊழல், மதவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என ஒருமித்த கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக அணி அமைக்கும் முயற்சியை கெஜ்ரிவால் கமல் மூலம் தொடங்கியிருப்பதாகவே தெரிகிறது.
- ராமானுஜம்