ஜெ. உயிருடன் இருந்த போதே 'கலகக் குரல்' எழுப்பியவர் கமல்.. ரீவைண்ட்
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே கலகக் குரல் எழுப்பியவர் நடிகர் கமல்ஹாசன்.
சென்னை: ஜெயலலிதா உயிருடன் இருந்த போது கமல்ஹாசன் ஏன் அரசியல் பற்றி பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் வசதியாக வரலாற்றை மறைத்துவிட்டு பேசுகின்றனர். ஜெயலலிதாவுக்கு எதிராக கலகக் குரல் கொடுத்த காரணத்தாலேயே கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது என்பதுதான் வரலாறு.
2012-ம் ஆண்டு முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அப்போது மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் பற்றிய 'ப.சிதம்பரம் குறித்த ஒரு பார்வை' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்றனர். அதில் கமல்ஹாசன் பேசுகையில், இந்தியாவிற்கு தேவைப்படும்போது சட்டம், நீதி தெரிந்தவர்கள் பலர் பொறுப்பில் இருந்ததால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் பலமாக இருந்ததால், நாம் பலமாக உள்ளோம். நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள் வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள். அந்த சந்தோஷ வெள்ளத்தில் என் ஆசை துளியும் இருக்க வேண்டும் என்றார்.
வேட்டி கட்டிய தமிழர் பேச்சு
திமுக தலைவர் கருணாநிதி பேசுகையில், 'சிதம்பரம் 1984ல் மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறை துணை அமைச்சராகி, பின்னர் உள்துறை இணை அமைச்சர், அதையடுத்து வர்த்தகம், நிதி அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து நிதித் துறைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அடுத்து அவர் என்ன அமைச்சர் என்பதை உங்கள் மகிழ்ச்சிப் பேரொலி மூலம் எடுத்துக் காட்டினீர்கள். வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வரவேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்ளீர்கள் என ட்விஸ்ட் வைத்தார்.
பிரதமர் பதவிக்கு ஜெ...
அதாவது அப்போது ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், அதிமுக பிரமுகர்கள் பிரசாரம் செய்து வந்தனர். இதைச் சுட்டிக்காட்டியே கருணாநிதியும் பேசியிருந்தார்.
விஸ்வரூபத்துக்கு தடை
இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ‘வேட்டி கட்டிய ஒரு தமிழன் பிரதமராக வர வேண்டும்' என்று ப.சிதம்பரத்தைக் குறிப்பிட்டு பேசியதும் கோபத்திற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார்கள்.
உண்மை திரிக்கப்பட்டது
இதே வாசகத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்தும் சுட்டிக்காட்டினார். உண்மையில் கமல்ஹாசன், நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள் வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள் என்றுதான் கூறினார். கருணாநிதிதான் வேட்டி கட்டிய தமிழன் என்ற வார்த்தையை உச்சரித்தது. கருணாநிதியே கமல் பேசியதாக பதிவு செய்ய உண்மை திரிக்கப்பட்டுவிட்டது.
கருணாநிதியின் சர்ச்சை கருத்து
கமல்ஹாசனுக்கு ஆதரவான அந்த அறிக்கையில் மற்றொரு சம்பவத்தையும் கருணாநிதி சுட்டிக்காட்டியிருந்தார். அதில், இந்த பகை இப்போது ஏற்பட்டதல்ல. எம்.ஜி.ஆர் இருந்தபோதே ஏற்பட்ட பகை. கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தின் சிறப்புக்காட்சி ஒன்றில் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டபோது, ஜெயலலிதா தன் கைப்பட எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதத்தில்,கமலஹாசனின் விக்ரம் படத்தின் நிதி சேர்க்கும் சிறப்புக் காட்சியில் நீங்கள் கலந்து கொள்ள சம்மதித்தும், உங்களை அவமானப்படுத்தும் விதத்தில் விளம்பரமே செய்யாமல் விட்டானே. அதை வேறு யாராவது உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தார்களா? நமக்கென்ன என்று மற்ற எல்லோரும் இருந்து விட்டார்கள். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. அடுத்தநாளே கமலஹாசன் ஒவ்வொரு நாளேட்டிலும் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுத்தானே? நீங்கள் பார்த்தீர்களோ இல்லையோ நான் கவனித்தேன். தனக்காக முழு பக்க விளம்பரம் கொடுக்க மட்டும் கமலஹாசனுக்குத் தெரிகிறது.
வழக்கு போட்ட ஜெ.
ஆனால் இவ்வளவு மக்கள் செல்வாக்குடைய முதலமைச்சரான உங்களை அழைத்து விட்டு விளம்பரமே செய்யவில்லை என்றால் அவன் உங்களை கிள்ளுக்கீரை என்றா நினைத்தான்? என்றெல்லாம் கைப்பட எழுதியதை நினைவுகூர்ந்தால் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கான உண்மைக் காரணம் தெரியும். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று பெரியார் அடிக்கடி கூறுவாரே அப்படி எதற்காக இந்தத் தடை என்பது இப்போது புரிகிறதா இல்லையா? எனவும் கூறியிருந்தார். இதற்காக கருணாநிதி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கும் தொடர்ந்திருந்தார்.
அபத்த பேச்சு
இத்தனையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே தமிழ் மண்ணில் நடந்ததுதான். ஆனால் வரலாற்றை திரித்தும் மறைத்தும் பழக்கப்பட்டவர்கள் 5 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றையும் மறைத்துவிட்டு பேசுவது அபத்தத்தின் உச்சம்தான்!