கமல், ரஜினியை விட தினகரன் பெரிய ஆள்தான்.. சந்தேகமே இல்லை.. இதைப் படிங்க!
லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தினகரனை காட்டிலும் குறைவான வாக்குகளையே பெறுவர்.
Recommended Video
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் இன்றைய தேதியில் நடத்தப்பட்டால் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தினகரனை காட்டிலும் குறைவான வாக்குகளையே பெறுவர் என்று தந்தி டிவி கருத்து கணிப்பு கூறியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இன்றுள்ள அரசியல் கட்சிகளின் மேல் மக்களுக்கு அதிருப்திகள் இருக்கத்தான் செய்கின்றன. இதையும் மீறி யார் மீது மக்களுக்கு கொஞ்சம் கோபம் இருக்கிறதோ அவர்கள்தான் தேர்தல்களில் வெற்றி பெறுவர் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் தந்தி டிவி கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. இதில் மக்களவை தேர்தல் இன்று நடந்தால் மக்கள் யாருக்கு வாக்களிப்பர் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதில் திமுக- காங் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
டிடிவி தினகரன்
தமிழக ஆளும் கட்சியோ 2-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் 5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளனர். ஆனால் டிடிவி தினகரனோ 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
ஆராய்ந்தது
இது ரஜினி , கமல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் மீது எத்தனை எத்தனை புகார்கள் வந்தபோதிலும் மக்கள் அவரை ஆதரிக்கின்றனர் என்றால் அவரிடம் அப்படி என்னதான் உள்ளது என்பதும் இவர்களிடம் என்ன இல்லை என்பது குறித்தும் நாம் ஆராய்ந்தோம். அதில் சில விஷயங்கள் புரியவந்துள்ளன.
ஆதரவாளர்கள்
டிடிவி தினகரனுக்கு நிர்வாக திறமை, ஆதரவாளர்களை தக்க வைத்து கொள்ளும் திறமை, எடுத்த காரியத்தில் வெற்றி பெறும் வரை ஓயாத உழைப்பு, திறமை, ஜெ,வுடன் சிறுவயதிலிருந்தே அரசியலை கற்ற அனுபவம் ஆகியன உள்ளது. மேலும் ஒரு தலைவன் தொண்டனுக்கு செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் ஆற்றுவதில் தினகரன் வல்லவர்.
பெரும்பாலானோர் வாக்களிப்பு
இதற்கு எடுத்துக்காட்டு ஆர்கே நகர் தேர்தல். இங்கு யாருமே எதிர்பாராத அளவுக்கு தினகரன் பெரும் வெற்றி பெற்றுள்ளார் என்றால் அதற்கு காரணம் தினகரனின் நாணயம்தான். மற்ற கட்சியினரை காட்டிலும் தினகரன் சொன்னால் சொன்னபடி காசு கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் குக்கருக்கு பெரும்பாலானோர் வாக்களித்தனர் என்று கூறப்படுகிறது.
போராட்டம்
கட்சி என்பதை விட ஒரு சிறு அணியாக இருந்தாலும் அதை அரவணைத்து செல்லும் திறமையும் உள்ளது. மேலும் மக்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்டு அதற்காக போராடும் குணம் கொண்டவர். தொகுதிக்கும் சொன்னதை செய்வார் என்று நம்புகின்றனர். ஆனால் ரஜினி, கமலோ என்னதான் அரசியலுக்கு வந்துவிட்டதாக அவர்கள் சொன்னாலும் முழு நேர அரசியல்வாதியாக மாறவில்லை. மக்களுக்காக எந்த ஒரு போராட்டத்தையும் இவர்கள் முன்னெடுக்கவில்லை.
லஞ்ச வழக்கு
மேலும் இவர்களது கொள்கைகள் என்ன, கோட்பாடுகள் என்ன என்பது குறித்து இன்னும் அறிவிக்காமல் உள்ளனர். கமல்ஹாசனாவது கட்சியை தொடங்கிவிட்டார். ஆனால் ரஜினியோ இன்னும் மீனம் , மேஷம் பார்த்து வருகிறார். இருவரையும் சாமானிய மக்கள் நெருங்க முடியாத அளவுக்கு ரசிகர்களை வைத்து ஒரு வட்டத்தையும் போட்டுள்ளனர். ஆனால் தினகரனையோ யார் வேண்டுமானாலும் அணுகலாம் என்ற நிலை உள்ளது. இதனாலேயே தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கு, ஹவாலா மோசடி வழக்கு என இருந்தாலும் கமல், ரஜினியை காட்டிலும் மக்கள் தினகரனுக்கு கூடுதலாக ஆதரவு கரம் நீட்டுகின்றனர். டுவிட்டரிலும் போயஸ் கார்டனில் பிரஸ் மீட்டும் கொடுத்தால் போதுமா மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மக்கள் சொல்லாமல் சொல்லிவிட்டனர்.