எங்கோ உள்ள இந்துக்களை பற்றி கவலை ஏன்? கமல் அதிரடி பேச்சு
சென்னை: உ.பி., லக்னோவிலுள்ள இந்துக்கள் மனது புண்படாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இன்று சென்னை கேளம்பாக்கத்தில் ரசிகர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். தமிழகம் முழுவதும் இருந்து 1,800 ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் போது அரசியல் பிரவேசம், ஏரி, குளங்களை தூர் வாருதல் தொடர்பாக ஆலோசித்தார்.
இரு தினங்கள் முன்பு விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, ஏரி, குளங்களை தூர்வாறுவதற்கு தனது ரசிகர்களை அனுப்பி வைக்க உள்ளதாக கமல் கூறியிருந்தார். இந்த நிலையில், இச்சந்திப்பு நடந்தது.
ஆலோசனைக்கு பிறகு, கூட்டத்தில் கமல் பேசுகையில், இந்துக்களிலும் இப்போது தீவிரவாதிகள் உருவாகிவிட்டனர் என்பதை மறுக்க முடியாது என்று வார இதழில் கமல்ஹாசன் எழுதியிருந்த கட்டுரைக்கு பாஜக, சிவசேனை எதிர்ப்பு தெரிவித்துள்ளதை மனதில் வைத்து பதிலடி கொடுத்தார்.
மேலும் உத்தரபிரதேசத்தில், கமலுக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டுகொள்ளாதவரை போல சில கருத்துக்களை அவர் வெளியிட்டார்.
அவர் பேசுகையில், நாமம், விபூதி, குல்லா, சிலுவை போட்டு வருபவர்கள் இங்கே உள்ளனர் என்று தனது ரசிகர்கள் கூட்டத்தை சுட்டிக் காட்டி தெரிவித்தார். எனவே தான் தப்பாக கருத்துகூறியிருந்தால், ரசிகர்கள் மனதுதானே முதலில் புண்பட்டிருக்கும் என்பதே கமலின் கருத்தாக உள்ளது.
இந்துக்கள் மனது புண்படும் என்றால் லக்னோ, உ.பியிலுள்ள இந்துக்களுக்கோ அது புண்படாது என நேரடியாகவே தாக்கினார் கமல். எனது குடும்பத்திலேயே நிறைய இந்துக்கள் உள்ளனர். அப்படி புண்பட்டால் எனது குடும்பத்தில் உள்ள இந்துக்களுக்கே முதலில் புண்படும் என்று கமல் தெரிவித்தார்.
எனது குடும்பத்தாரிடம் இவர்கள் மிரட்டுவதை விட பெரிய ஆயுதம் உள்ளது. அன்பு என்ற ஆயுதம் உள்ளது. என்னிடம் அன்பு காட்ட மாட்டேன் என அவர்கள் கூறினால் நான் பயந்துவிடுவேன். இவ்வாறு கமல் பேசினார்.
இதன்மூலம், உத்தரபிரதேசத்தில், கமலுக்கு எதிராக சில இந்து நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை சட்டை செய்யவில்லை என்பதைப்போல அவர் கருத்து வெளிப்படுத்திவிட்டார்.