உலகளந்த பெருமாள் கோவில் உற்சவத்தில் உடைந்த தேர்ச் சக்கரம்: காஞ்சி மக்கள் அதிர்ச்சி
காஞ்சிபுரம்: நேற்று நடந்த காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்ட உற்சவத்தின் போது, தேரின் முன் சக்கரம் உடைந்ததற்கு 'பராமரிப்பு பணிகளில், அறநிலையத் துறை அலட்சியமாக உள்ளதே' காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள உலகளந்த பெருமாள் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 12ம் தேதி இக்கோவிலில் கொடியேற்றத்துடன் ஆண்டு பிரம்மோற்சவம் தொடங்கியது. ஏழாம் நாளான நேற்று, திருத்தேர் உற்சவம் நடைபெற்றது.
காலை, 8:00 மணிக்கு, கோவிலில் இருந்து தேர் புறப்பட்டது. சக்கரங்கள் ஆங்காங்கே சிதிலமடைந்திருந்ததால் தள்ளாடியபடியே சென்ற தேர், பூக்கடை சத்திரம் பகுதியில் சென்றபோது, முன்சக்கரம் உடைந்து, நடுவழியில் நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆசாரி மற்றும் இரும்பு பட்டறை பணியாளர்கள் வரவழைக்கப் பட்டு தற்காலிகமாக தேரின் சக்கரம் சீரமைக்கப்பட்டு, பகல் 1:00 மணிக்கு, தேர் மீண்டும் புறப்பட்டது.
அறநிலையக் கட்டுப்பாட்டில் இருக்கும் உலகளந்த பெருமாள் கோவிலில் பராமரிப்புப் பணிகள் சரியாக நடைபெறாததற்கு, இந்த தேர்ச் சக்கரம் உடைந்ததே சாட்சி எனவும், இது தொடர்பாக கோவில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்கள் இடையே ஏற்பட்டுள்ள பனிப்போர் நடந்து வருவதும் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தேர் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், தேரை இயக்கக் கூடாது என பொதுப்பணித் துறை மறுப்புத் தெரிவித்த போதும், கோவில் நிர்வாகத்தினர் பராமரிப்பு பணிகள் செய்யப்படும் என உறுதியளித்து தேர் உலா நடத்தியதாகத் தெரிகிறது.