அப்பா விரும்பாததை செய்யும் மகன்... அப்பா மனம் கோணாத மகள்... கனிமொழி சொல்வது யாரையாம்?
திருச்சி மகளிர் தின விழாவில் ராஜ்யசபா எம்.பி. கனிமொழி மேற்கோள் காட்டிய உதாரணம் அரசியல் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
சென்னை: சர்வதேச மகளிர் தின விழாவில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் சொன்ன அப்பா- மகன் - மகள் தொடர்பான முன்னுதாரணம் அவரது சகோதரரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை மறைமுகமாக தாக்குவதாக இருந்ததாக கூறப்படுகிறது.
திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் உருவெடுத்த பின்னர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த கனிமொழி துணைப் பொதுச்செயலராக விரும்பினார். ஆனால் ஸ்டாலின் இதனை விரும்பவில்லை.
சபரீசன்...
இதனைத் தொடர்ந்து கனிமொழியை ஓரம்கட்டுவதில் ஸ்டாலின் தரப்பு மும்முரமாக இருந்தது. அண்மையில் டெல்லி சென்ற ஸ்டாலின், கனிமொழியிடம் பொறுப்புகளை ஒப்படைக்காமல் திருச்சி சிவா மற்றும் மருமகன் சபரீசனிடம் அனைத்து பணிகளையும் கொடுத்திருந்தது.
திருச்சியில் கனிமொழி
இந்த நிலையில் திருச்சி ஜோசப் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி இன்று பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பெண்ணுரிமை பற்றி உரையாற்றினார் கனிமொழி.
மகன் செயலை விரும்பாத தந்தை
தமது உரையில், ஒரு தந்தை மகனிடம் உன் செயலில் எனக்கு விருப்பமில்லை.... நீ செய்வதைச் செய் என்கிறார்.. உடனே மகன் தாம் விரும்புவதையே செய்வார். ஆனால் மகளோ தந்தையின் மனம் கோணக்கூடாது என அமைதியாக இருந்துவிடுவார்... ஆனால் அந்த மகளுக்கும் தாம் விரும்பியதைச் செய்யும் துணிச்சல் வேண்டும் எனக் கூறினார்.
ஸ்டாலினா அது?
கனிமொழி கூறிய இந்த முன்னுதாரணம் அப்படியே திமுக தலைவர் கருணாநிதி, மகன் ஸ்டாலின், மகள் கனிமொழி ஆகியோருக்கு இடையேயான பனிப்போரை அப்படியே வெளிப்படுத்துவதாக இருந்தது. ஆகையால் ஸ்டாலினை ஒருவேளை மறைமுகமாக தாக்குகிறாரோ என்ற சந்தேகமும் அந்த அரங்கில் எழுந்தது.