"அம்மா" ஒரு யோகி... கனிமொழியின் முன்னாள் கணவர் அதிபன் போஸ் அமெரிக்காவிலிருந்து "ரிட்டர்ன்"
சென்னை: பிரபல தொழிலதிபராக விளங்கி, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் முன்னாள் கணவருமான அதிபன் போஸ் இப்போது ஒரு காவி வேட்டி துறவியாகி விட்டார். அமெரிக்காவில் செட்டிலாகி விட்ட அதிபன் போஸ் அங்கு ஆன்மீகவாதியாக வலம் வருகிறார். அடுத்து தமிழகத்திலும் கால் பதிக்கப் போகிறாராம்.
பற்பல தொழில்களில் ஒரு காலத்தில் ஈடுபட்டிருந்தவர் அதிபன் போஸ். இப்போது அவர் முற்றும் துறந்த துறவியாகி விட்டார். குடும்பம் என்று ஒன்று இருந்தாலும் கூட அவர் துறவியாக தன்னை வரித்துக் கொண்டு வலம் வருகிறார்.. இங்கல்ல அமெரிக்காவில்.
இப்போது தான் இல்லறத்தில் இல்லை என்றும் முழுமையான ஆன்மீகவாதியாகி விட்டதாகவும், தனக்கு அமெரிக்காவில் 1 லட்சம் சீடர்கள் இருப்பதாகவும் கூறுகிறார் அதிபன் போஸ்.
இதுதொடர்பாக விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
திடீர் ஆன்மீகம் ஏன்?
சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டு. கனிமொழியுடன் திருமணம் நடந்த பிறகு என் வாழ்வில் முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அப்போது நான் உயிருடன் இருக்கும்போதே இறந்து, என் ஆத்மா என்னை விட்டு வெளியேறியது போன்று உணர்ந்தேன். அந்த இறப்புக்கு நிகரான சம்பவத்தில் நான் இந்த உலகத்தை விட்டு வேறு உலகத்திற்குள் புகுந்ததாக கருதினேன்.
ஒரு லட்சம் சீடர்கள்
அதற்கு பிறகுதான் முழுமையான ஆன்மிகத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இன்று வரை ஆன்மிகத்தில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் எனக்கு ஆசிரமங்கள் இருக்கின்றன. அதில் ஒரு லட்சம் சீடர்கள் ஆன்மிகத்தை பரப்பி வருகிறார்கள்.
முடிந்து போன கதை
அது முடிந்து போன கதை. அதை மீண்டும் கேட்க வேண்டாம். கனிமொழியை திருமணம் செய்வதற்கு முன்பே, என்னை அரசியலில் ஈடுபடுத்தக்கூடாது, நீயும் அரசியலில் ஈடுபடக்கூடாது, என்னை எந்த விஷயங்களிலும் நிர்பந்திக்கக்கூடாது' என்று சில நிபந்தனைகளை போட்டேன். அதை ஏற்றுக்கொண்டபின்தான் திருமணம் நடந்தது. ஆனால், கொஞ்ச நாளிலேயே அதை சரியாக கனிமொழி கடைபிடிக்கவில்லை. அதற்கு பிறகு நாங்கள் ஒருமித்த கருத்துடன் விலகிக் கொண்டோம்.
3 முறை கல்யாணம்
அதற்கு பிறகு மீண்டும் திருமணம் செய்தேன். அவர் இப்போது துபாயில் வசிக்கிறார். இரண்டு குழந்தைகளை தத்து எடுத்தேன். மூன்றாவது ஒரு திருமணம் செய்து ஒரு குழந்தையுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறேன். என் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக போகிறது. இது எந்த வகையிலும் ஆன்மிக பணியை பாதித்ததில்லை. அதற்கு என் குடும்பம் தடையாகவும் இருந்ததில்லை. எந்த சிக்கலும் இல்லாமல், முழு மனதோடு ஆன்மிக பாதையில் ஈடுபட்டு வருகிறேன்.
நூல்கள்
என்னுடைய இருபது ஆண்டு ஆன்மிக பணிகளில் உள்ள சிறப்பு அம்சங்களையும், மனதை ஒருநிலைப்படுத்துதல், மனிதன் என்பவன் யார் என பல விஷயங்களை அதில் சொல்லியுள்ளேன். அதுமட்டுமில்லாமல், ஆன்மிகத்தில் ஒரு மனிதன் எந்த விதத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும், அவ்வாறு ஈடுபட்டால் என்னென்ன நிலையை அடைவான் என்பதோடு, சிறு உயிர்களுக்கு வயிறார உணவு அளித்தாலே அவன் மோட்சம் அடைவான் என்றும் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளேன்.
தமிழகத்திலும் கிளை பரப்புவேன்
அமெரிக்காவில் ஆசிரமத்தை தொடங்கினாலும் தமிழகத்திலும் எனது ஆன்மிக பணியை துவங்க ஆசைப்படுகிறேன். தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் ஜெயலலிதா. அதனால்தான் அவர் முன்னிலையில் எனது புத்தகத்தை வெளியிட முதல்வரிடம் நேரம் கேட்டிருக்கிறேன். நல்ல முடிவு சொல்வார் என்று நம்புகிறேன்.
"அம்மா" ஜெயலலிதா
தமிழ்நாட்டில் பிறந்த நான், இந்த நூலை தமிழ்நாட்டில் வெளியிட விரும்புகிறேன். தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. தானத்தில் பெரிய தானமான அன்னதானம் திட்டத்தை தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக நடத்தி வருகிறார்.
ஜெயலலிதா ஒரு யோகி
யோகி போன்ற ஒருவரால்தான் இதையெல்லாம் செய்ய முடியும். அதேபோல்தான் மத்தியிலும் மோடி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். அவரும் ஒரு யோகிதான். அவரின் யோக திட்டத்தால் இந்தியா மற்ற நாடுகளுக்கு உதாரணமாக சர்வதேச அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது.
புகழ்ந்து கொண்டே போகலாம்
மாநில அரசின் செயல்பாடுகளை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அம்மா உணவகம் சிறப்பானது, இது மட்டுமில்லாமல் பல திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
சிறந்த பிரதமர் மோடி
நான் இருபது நாடுகளை தேர்ந்தெடுத்து அதில் யோகாவை பரப்ப நினைத்தேன். ஆனால் மோடி உலக நாடுகளை இணைத்து யோகா தினமாகவே கொண்டாடி விட்டார். இதுவரையிலும் நான் கண்டிராத பிரதமர் மோடி. மிகவும் சிறப்பாக செயல்படுகிறார் என்றார் அவர்.