விஷ்ணு பிரியாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படையாக விசாரிக்க வேண்டும்: கனிமொழி
சென்னை: விஷ்ணுபிரியாவின் மரணத்தில் இருக்கும் மர்மங்களை கண்டறிய, இந்த வழக்கு விரைவாகவும் வெளிப்படையாகவும் விசாரிக்கப்பட வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். பெண்களுக்காக நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் உரிமைக்குரல் எழுப்பிக்கொண்டே இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கனிமொழி எம்.பி வெளியிட்ட அறிக்கை:
கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள், தமிழகத்தில் பெண்களின் நிலை எவ்வளவு மோசமானதாக மாறி வருகிறது? என்பதற்கு உதாரணங்களாக இருக்கின்றன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போலீஸ் டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியாவின் மரணச்செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இளைய வயதுக்காரர் எவரது மரணமுமே வருத்தத்தை தரக்கூடியதுதான். அதேநேரம், விஷ்ணு பிரியா காவல்துறையில் பணியாற்றி வந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரி எனும் போது வருத்தம் அதிகமாகிறது.
மரணத்தில் மர்மம்
இப்போது வரைக்கும் விஷ்ணுபிரியாவுடைய மரணத்தின் உண்மையான காரணத்தை நம்மால் அறிந்துகொள்ள இயலவில்லை. வேலைக்கு செல்லும் பெண்களின் மேல் தொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு விஷ்ணுபிரியாவின் மரணம், இன்னொரு வலி மிகுந்த துரதிர்ஷ்டமான உதாரணமாக இருக்கிறது. விஷ்ணுபிரியாவின் மரணத்தில் இருக்கும் மர்மங்களை கண்டறிய, இந்த வழக்கு விரைவாகவும் வெளிப்படையாகவும் விசாரிக்கப்பட வேண்டும்.
ஆடை தொடர்பான சர்ச்சை
விஷ்ணு பிரியா மரணம் பற்றிய விவாதங்கள் வெடித்துக் கொண்டிருக்கும்போதே, ‘பெண்களின் உடை தொடர்பான கட்டுரை' சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. பெண்கள் இன்னும் வெறும் போகப் பொருளாகவே பார்க்கப்பட்டு வருவதற்கு, இதுபோன்ற நிகழ்வுகளே கசப்பான உண்மை மிகுந்த சாட்சிகள்.
குற்றம் காண்பதா?
பெண்களும் ஆண்களுக்கு நிகரான இந்நாட்டின் குடிமக்கள்தான் என்பதையும், பெண் சுதந்திரம் மதிக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி சொல்லவேண்டிய நேரம் இது. பெண்கள் அணியும் ஆடைகளை வைத்து அவர்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.
சிந்திக்க வேண்டும்
வேலைக்குப் போனால் விமர்சிக்கப்படுகிறார்கள். ஆண்கள் அணியும் ஆடைகளில் ஆபாசம் பற்றி இதுவரை ஒரு கட்டுரையாவது எழுதப்பட்டிருப்பதாக தகவல் உண்டா? நம் நாட்டில் இன்னமும் கவுரவ கொலைகள் நடந்து வருவது துன்பம் மிகுந்த உண்மை நிலவரமாக உள்ளது. மக்கள் தொகையில் பாதியளவு உள்ள பெண்கள் இந்நாட்டில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள்? என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
குரல் கொடுப்பேன்
சத்தமின்றி பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நவீன இந்தியாவின் பெண்கள் யாரோ அல்ல. அவர்கள் நம் சக மனிதர்கள்தான் என்பதை, நாட்டின் அரசியல் சமூக அமைப்புகளோடு ஊடக நிறுவனங்களும் உணர்ந்து அதன்படி நடந்துகொள்ளவேண்டும். இவ்வகையில், நம் நாட்டு பெண்களுக்காக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நிச்சயம் உரிமைக்குரல் எழுப்பி கொண்டே இருப்பேன்.