ஓடும் பஸ்சில் திடீர் தீ... பயத்தில் அலறிய பயணிகள்: குமரியில் பரபரப்பு
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் ஓடும் பஸ்சில் திடீரென தீ பிடித்ததால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில் இயங்கும் பல அரசு பஸ்கள் பராமரிப்பற்ற நிலையில் உள்ளதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்று விடுவதாக பயணிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோல், ஓடும் பஸ்சில் திடீர் தீ விபத்துகளும் ஏற்படுகிறது.
இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலம் நோக்கி சென்ற ஒரு அரசு பஸ் ஒன்று இரணியல் அருகே பரசேரியில் வந்தபோது திடீரென்று என்ஜினில் இருந்து புகை கிளம்பி தீப்பிடித்தது. இதை பார்த்ததும் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினார்கள். உடனே பஸ் டிரைவர் சமார்த்தியமாக செயல்பட்டு அந்த பஸ்சை சாலை ஓரத்தில் நிறுத்தினார்.
பஸ் நிறுத்தப்பட்டதும் பயணிகள் அலறியபடி கீழே இறங்கி ஓடத் தொடங்கினர். பஜார் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக, அந்த பகுதியில் இருந்த வியாபாரிகளும், பொதுமக்களும் ஓடிச்சென்று தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதன் பிறகு அந்த பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.