மு.க. ஸ்டாலினின் 'முதல்வர் வேட்பாளர்' ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்த முப்பெரும் விழா!!
சென்னை: திமுகவின் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளுக்கும் நேற்று நடைபெற்ற முப்பெரும் விழா முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் மாவட்டங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டன; பலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் திமுக தொண்டர்களிடையே உற்சாகம் ஏற்பட்டது.
ஆனால் அதன் பின்னர் திமுக உட்கட்சித் தேர்தலில் 'பலமான' குறுநில மன்னர்களான மாவட்ட செயலாளர்கள் கைகளே ஓங்கியதால் திமுகவில் தொய்வு ஏற்பட்டது.
கலகக் குரல் கலியாணசுந்தரம்
இந்த நிலையில் திமுகவின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக இருந்த கலியாணசுந்தரம், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கலகக் குரல் எழுப்பினார். இதனால் கடுப்பாகிப் போன கருணாநிதி கலியாணசுந்தரத்தை டிஸ்மிஸ் செய்தார்.
லகானை கையில் எடுத்த கருணாநிதி
மு.க.ஸ்டாலினே முதல்வர் வேட்பாளர் என்பதை கருணாநிதி விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இதனால் கட்சியை மீண்டும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் அவர் கொண்டு வந்தார்.
அதிரடி நடவடிக்கைகள்
மு.க. அழகிரியை திமுகவில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக்கப்பட்டன. தனது ஆதரவாளரான டி.கே.எஸ். இளங்கோவனை கலைஞர் டிவி இயக்குநர்களில் ஒருவராக்கினார். தனது ஆதரவாளரான ஆர்.எஸ். பாரதியை அமைப்புச் செயலராக்கினார் கருணாநிதி.
முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்
இதற்கு போட்டியாக மு.க.ஸ்டாலின் தரப்பு, முதல்வர் வேட்பாளர் முழக்கத்தை தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கியது. மொத்தம் 17 மாவட்ட செயலாளர்கள் திமுகவின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலினே என்று கருணாநிதிக்கு கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகின.
முப்பெரும் விழா
இதனால் கருணாநிதிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மனக்கசப்பு என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் திமுகவின் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. வழக்கம் போல மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தார்.
துரைமுருகன்
அதே நேரத்தில் 2016-ல் மு.க.ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர் என்ற முழக்கத்துக்கு முற்றுப்புள்ளியும் இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டது. இதைத் தொடங்கி வைத்தது துரைமுருகன்தான். அவர் தன்னுடைய பேச்சில், 2016ல் கருணாநிதி தலைமையில்தான் திமுக ஆட்சி அமைக்கும் என்று திட்டவட்டமாக கூறினார். அத்துடன் அதன் பின்னரே மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
சரணான ஸ்டாலின்
இதனால் மு.க.ஸ்டாலின் பேசும் போது வேறு வழியே இல்லாமல், கருணாநிதி தலைமையில் 2016ஆம் ஆண்டு ஆட்சி அமைப்போம் என்று கூறினார். அத்துடன் கருணாநிதிக்கும் தமக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றெல்லாம் ஸ்டாலின் வெளிப்படையாகப் பேசியது , கருணாநிதியிடம் சரணடைந்தது போல் இருக்கிறது என்கின்றனர் மூத்த திமுக நிர்வாகிகள்.
முற்றுப்புள்ளி
மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்ற முழக்கத்துக்கு நேற்றைய முப்பெரும் விழா முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என்பதுதான் திமுக நிர்வாகிகளின் கருத்தாக இருக்கிறது.