நேர்மையாக பணியாற்றியதால் கரூர் எஸ்.பி. வந்திதா பாண்டே இடம் மாற்றம்: கருணாநிதி கண்டனம்
சென்னை: நேர்மையாகப் பணியாற்றிய காரணத்தால் கரூர் எஸ்.பி. வந்திதா பாண்டே இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேள்வி : கரூர் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த வந்திதா பாண்டே மாற்றம் செய்யப்பட்டுள்ளாரே?
கருணாநிதி:- அமைச்சர்களுக்கு மிகவும் நெருங்கிய அன்புநாதன் வீடு, குடோன் ஆகியவை சோதனைக்கு உள்ளான போது, கரூர் மாவட்டத்தில் காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய வந்திதா பாண்டே அவர்களை கொலை செய்யக் கூட முயற்சி நடைபெற்ற தாக ஏடுகளில் அப்போதே செய்தி வந்தது. அன்புநாதன் வழக்கை திசை திருப்ப ஒரு சிலர் முயன்ற போது, அதற்கு கரூர் மாவட்டக் காவல் துறை கண்காணிப் பாளர் ஒத்துழைப்பு நல்கவில்லை; நேர்மை உணர்வோடு, சட்டப்படி நடந்து கொண்டார்.
அதற்காக அ.தி.மு.க. ஆட்சி நிர்ணயித்துள்ள விலையைத்தான் இப்போது கொடுத்துள்ளார். காவல் துறை அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டுள்ளார்கள். ஆனால் கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் மட்டும் சென்னையிலே உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த ஆட்சியில் சட்ட விதிமுறைகளின்படி, நியாயமாகப் பணியாற்றினால் இப்படிப்பட்ட தண்டனைக்குத்தான் ஆளாக நேரிடும் என்பதற்கு இது தக்க உதாரணம் அல்லவா?