ஜெயலலிதா கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 2 பேர் பலி- கருணாநிதி இரங்கல்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விருத்தாசலம் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பலியான இருவரின் குடும்பங்களுக்கும் திமுக தலைவர் கருணாநிதி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர்கள் 13 பேரை ஆதரித்து விருத்தாசலத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கலந்து கொண்டார்.

அப்போது, பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பொதுமக்களில் இருவர் நெரிசலில் சிக்கி பரிதாபமாக பலியானார்கள். மேலும், காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு மற்ற கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், திமுக தலைவர் கருணாநிதியும் தனது கண்டனத்தையும், உயிரிழந்த மக்களின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருத்தாசலத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக, ஆளுக்கு 300 ரூபாய் ரொக்கமும், பிரியாணி பொட்டலமும் கொடுத்து பல இடங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்த காரணத்தால், வெளியேற முயன்ற போது காவல் துறையினர் அவர்களை வெளியே விட மறுத்ததால், நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் 17 பேர் மருத்துவ மனையிலே சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
நெரிசலில் சிக்கிப் பலியான இரு குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், மருத்துவ மனையிலே சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் இந்த விபத்துக்குக் காரணமான இந்த ஆட்சியினரின் காவல் துறையினரின் செயல்களுக்கு எனது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்''என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications