திராவிட இயக்கத்தின் தீபமாய் திகழ்ந்த “சொல்லின் செல்வி" சற்குண பாண்டியன் - கருணாநிதி புகழஞ்சலி
சென்னை: திராவிட இயக்கத்தின் தீபமாய் திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் என்று திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி இன்று வெளியிட்ட இரங்கல் அறிக்கை:
கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த திருமதி சற்குணப் பாண்டியன் நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு மறைந்து விட்டார் என்ற செய்தியினை இன்று காலையில் கேட்டு எனக்கு நாளே ஆறுதல் கூறிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன்.
சிறுமியாக இருந்தது முதல்...
சின்னஞ்சிறுமியாக இருந்த காலத்திலிருந்து கழக மேடைகளிலே பேசுகின்ற பேச்சாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் மகளிர் அணியிலே இடம் பெற்று, அதன் தலைவராக வளர்ந்து, கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர் என்ற அளவுக்கு படிப்படியாக உயர்ந்தவர் தான் சற்குணப் பாண்டியன். மாணவர் அணி, மகளிர் அணி, வடசென்னை மாணவர் அணி, சென்னை மாவட்ட மகளிர் அணி, மாநில மகளிர் அணி, துணைப் பொதுச் செயலாளர் என்று அவர் வகித்த பல பொறுப்புக்களிலும் சிறப்பாகப் பணியாற்றி கழகத்தினர் அனைவரது மதிப்பையும் பெற்றவர் சற்குணம்.
அமைச்சராக....
கழகத்தின் சார்பில் 1989ஆம் ஆண்டிலும், 1996ஆம் ஆண்டிலும் ராதாகிருஷ்ண நகர் தொகுதியிலிருந்து சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, சமூக நலத் துறை அமைச்சராக இருந்து மிகத் திறமையாகப் பணியாற்றினார்.
சுயமரியாதை பொன்னுசாமி
கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல் நலம் பெரிதும் பாதிக்கப் பட்ட நிலையிலும் கழகத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்ள அவர் தவறியதே இல்லை. இவரது தந்தை பழம்பெரும் சுயமரியாதைக்காரரான பொன்னுசாமி அவர்களால் ஊக்கமும் உற்சாகமும் ஊட்டப்பட்டு, திராவிட இயக்கத்தின் தீபமாய், மாதர் குல திலகமாய் விளங்கிய சற்குணம் நம்மை விட்டுச் சென்று விட்டார்.
சொல்லி செல்வி
பேரறிஞர் அண்ணா அவர்களால் "சொல்லின் செல்வி" என்று பாராட்டப்பட்டவர் சற்குணம். கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் மகளிர் படை திரட்டி, அதற்குத் தலைமை தாங்கி சிறை சென்றவர்.
படைதிரட்டிய பெருமை
1971ஆம் ஆண்டிலேயே இவரது சேவையைப் பாராட்டி, சென்னை மாநகராட்சிக்கு நியமன உறுப்பினராக கழகம் இவரைத் தான் நியமித்தது. சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் மண்டல மகளிர் மாநாடுகளை பொறுப்பேற்று, சிறப்பாக நடத்திக் காட்டிய பெருமையும் சற்குணத்திற்கு உண்டு. 17-9-1988 சென்னையில், நடைபெற்ற தேசிய முன்னணி ஊர்வல அணி வகுப்பில் பல்லாயிரக்கணக்கான மகளிரைத் திரட்டி பங்கேற்கச் செய்த பெருமையும் இவருக்கு உண்டு.
கலைஞர் விருது
கழகத்திலே இவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி, தலைமைக் கழகத்தின் சார்பில் கலைஞர் விருதினை 1990ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையிலே சற்குணம் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நான் மருத்துவமனைக்கே சென்று பார்த்து, உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளும்படி கூறி வந்தேன். தற்காலிகமாக நலம் பெற்றாலும், தொடர்ந்து பல பாதிப்புகளுக்கு ஆளாகி நேற்று நள்ளிரவு சற்குணம் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து தாங்கொணா துயரடைகிறேன்.
அவருடைய குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும், குறிப்பாக மகளிர் அணியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.