நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்கள் கையில் இருக்கிறது: புதுவையில் கருணாநிதி பேச்சு
புதுவை: நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்கள் கையில் இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி புதுவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளார்.
புதுவையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 30 பேரை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை தேர்தல் பிரசாரம் செய்தார். திமுக சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கருணாநிதி கூறுகையில், திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால்தான் நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும். புதுச்சேரியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளது.
தமிழகம், புதுவையில் கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சியாளர்களை நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதிகளைக் கூட ஆட்சியாளர்கள் மறந்துவிட்டனர். மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற கவலை அவர்களுக்கு இல்லை.
இந்தியாவில் பெருவாரியான மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டிய பணியை திமுக ஏற்றுக்கொண்டுள்ளது. அதை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக செய்யும். நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்கள் கையில் இருக்கிறது. ஆகையால் நாடு குட்டிச் சுவராக ஆகிவிடக்கூடாது.
நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது. நீங்கள் தான் எதிர்காலத்தில் இந்த நாட்டை வழி நடத்தி செல்ல வேண்டும். நீங்கள் நினைத்தால் எதுவும் முடியும். உங்களை வாழ்த்தினால் அது என்னை வாழ்த்துவது போல் அமையும். இவ்வளவு நேரம் இளைஞர்கள் பற்றி பேசியதற்கு நானும் ஒரு இளைஞராக இருப்பது தான் என்று நகைச்சுவையாக கூறினார் கருணாநிதி.