வரலாறு படைத்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு கருணாநிதி, ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார். தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவைப் பாராட்டி, தமிழக அரசு நல்ல முறையில் கௌரவிக்க வேண்டு மென்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் பெறவில்லையே என்று ஏங்கிய எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களின் மனதைக் குளிர வைத்து ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களுக்கும்,நாட்டிற்கும் மகத்தான சிறப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
கருணாநிதி முகநூல் அறிக்கை :
அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் சார்பில் யாரும் தங்கப் பதக்கம் பெற முடியாத நிலையில், 31வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து, தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில், தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட சேலம் மாரியப்பன் தங்கவேலு, உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருப்பது பெரிதும் பாராட்டுக்குரிய செய்தியாகும். இந்தப் பிரிவில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய போட்டியாளர் வருண் சிங் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உட்பட இருவரையும் பாராட்டி வாழ்த்துகிறேன். நடந்து முடிந்த 31வது ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாராட்டு தெரிவித்து நிதி உதவி அளித்ததைப் போலவே, இந்த பாரா ஒலிம்பிக் போட்டியிலே வெற்றி பெற்ற வீரர்களை, குறிப்பாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவைப் பாராட்டி, தமிழக அரசு நல்ல முறையில் கௌரவிக்க வேண்டு மென்று வலியுறுத்துகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்தியுள்ளார்.
ஸ்டாலின் முகநூலில் வாழ்த்து
பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீரர் மாரியப்பனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ நகரில் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89மீ உயரம் தாண்டியதன் மூலம் இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியிருப்பதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் பெறவில்லையே என்று ஏங்கிய எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களின் மனதைக் குளிர வைத்து ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களுக்கும்,நாட்டிற்கும் மகத்தான சிறப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார்.
மற்றொரு இந்திய வீரரான வருண் சிங் பாடி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார். இதனையடுத்து ஒரே பிரிவில் இந்திய வீரர்கள் இருவர் இரு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய திருநாட்டிற்கு பாரா ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் புதிய இடத்தை பெற்று கொடுத்துள்ளது. பதக்கம் பெற்ற வீரர்களை பாராட்டும் இந்த நேரத்தில் அவர்களுக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களை பாராட்டி ஊக்கம் அளித்தது போல் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுத்து விருதுகளும் வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.