மருத்துவம், கல்விக்காக 13 பேருக்கு தலா ரூ.25,000 வழங்கிய கருணாநிதி
சென்னை: மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 13 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை திமுக தலைவர் கருணாநிதி வழங்கியுள்ளார்.
இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக திமுக தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியை வங்கியில் வைப்புநிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டி தொகையைக் கொண்டு மாதந்தோறும் ஏழை-எளிய நலிந்தோருக்கு உதவித் தொகையாக 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
வைப்புநிதியாக போடப்பட்ட ரூ.5 கோடியில், 30-வது புத்தகக் கண்காட்சியை 10.1.2007 அன்று திறந்து வைத்து கருணாநிதி பேசும்போது, கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்தார்.
அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள ரூ.4 கோடியிலிருந்து வரும் வட்டி தொகையில் 2007-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2005-ம் ஆண்டு நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.3 கோடியே 26 லட்சத்து 65 ஆயிரம் ஆகும். மேலும் 2014, ஜூலை மாதம் வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 13 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தை கருணாநிதி வழங்கினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications