திமுக முப்பெரும் விழா: குடும்பத்துடன் திரண்டு வர தொண்டர்களுக்கு கருணாநிதி அழைப்பு
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில் குடும்பத்துடன் திரளாக பங்கேற்குமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பெரியாரின் 135-ஆவது பிறந்த நாள், அண்ணாவின் 105-ஆவது பிறந்த நாள், திமுகவின் 65-ஆவது ஆண்டு விழா ஆகியவற்றை முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.
இந்த ஆண்டு முப்பெரும் விழா திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. வேலூரில் நடைபெறுவதாக இருந்த இந்த விழா, தொடர் மழை காரணமாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பெரியார் சமுதாயச் சீர்திருத்தச் சிற்பி என்றால், அண்ணா அரசியல் மறுமலர்ச்சி ஆசான். பெரியாரும் அண்ணாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போன்றவர்கள். காரல்மார்க்சும் ஏங்கல்சும் எப்படி பொதுவுடமை இயக்கத்தின் பிதாமகர்களோ, அதுபோல பெரியாரும் அண்ணாவும் திராவிட இயக்கத்தின் பிதாமகர்கள்.
இந்த இருவரின் திருவுருவத்தை நம் நெஞ்சிலே செதுக்கி அவருடையை வழியில் அயராது பணியாற்றி வருகிறோம். திமுகவைத் தொடங்கும்போது சமுதாயத் துறையில் சீர்திருத்தம், பொருளாதாரத் துறையில் சமதர்மக் குறிக்கோள், அரசியல் துறையில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலை ஆகியவையே திமுகவின் கோட்பாடுகள் என அண்ணா பிரகடனப்படுத்தினார்.
இன்று எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஜனநாயகக் கடமையை பொறுப்புடன் நிறைவேற்றி வருகிறோம். பெரியார், அண்ணா காட்டிய வழியில் திமுக தனது பயணத்தைத் தொடரும்.
இந்த முப்பெரும் விழாவில் திமுக அறக்கட்டளை சார்பில் மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மற்றும் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான பெரியார் விருது த.மு. ஆரியசங்காரன், அண்ணா விருது எல், கணேசன், பாவேந்தர் விருது க. திருநாவுக்கரசு, கலைஞர் விருது எஸ்.ஏ.எம். உசேன் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. எனவே, இந்த விழாவுக்கு குடும்பத்துடன் தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் என கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.