ஸ்டிக்கர் ஒட்டியது பற்றி விசாரணை தேவை, அதிமுகவினரின் செயல் மக்களுக்கு செய்யும் துரோகம்: கருணாநிதி
சென்னை: நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் பறித்து அதில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவது பற்றி நிச்சயம் விசாரணை நடத்த வேண்டும். நிவாரணப் பொருட்களை அவர்கள் தடுத்திருந்தால் அது வெறும் தவறு அல்ல மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுகவினரும், பொதுமக்களும் அண்ணா அறிவாலயத்தில் அளித்த நிவாரணப் பொருட்களை திமுக தலைவர் கருணாநிதி பார்வையிட்டு அவற்றை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்க அறிவுரை வழங்கினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
தெரியாதா என்ன?
சென்னையில் மக்கள் வெள்ளத்தால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நீங்களே நேரில் பார்த்திருக்கிறீர்கள். அப்படி இருக்கையில் உங்களுக்கு தெரியாதா? தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் அளவுக்கு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவினர்
நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் பறித்து அதில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவது பற்றி நிச்சயம் விசாரணை நடத்த வேண்டும். நிவாரணப் பொருட்களை அவர்கள் தடுத்திருந்தால் அது வெறும் தவறு அல்ல மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.
பயிர் சேதம்
சென்னை, கடலூருக்கு அரசு நிவாரண உதவிகள் அளித்துள்ளது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, கழகப் பொருளாளர் இது குறித்து பார்த்து வருகிறார் என்றார் கருணாநிதி.
தமிழக அரசு
தமிழகத்தில் இயல்வு நிலை திரும்ப என்ன செய்ய வேண்டும் என்று கூற நான் தயார். ஆனால் நான் கூறுவதை தமிழக அரசு கேட்கும் நிலையில் இல்லை. ஏற்கனவே நான் கூறிய பலவற்றை கேட்கக் கூட அரசு தயாராக இல்லை.
விவசாயிகள்
மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடன்களை அரசு ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.