நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தால், நீதி எப்படி விரைவாகக் கிடைக்கும்? - கருணாநிதி
சென்னை: உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் அதிகளவில் காலியாக இருந்தால், பாதிப்புக்கு ஆளாகியுள்ளோருக்கு நீதி எப்படி விரைவாகக் கிடைக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி பணியிடங்களும், 24 உயர் நீதிமன்றங்களில் 478 நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
39 லட்சம் வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. நீதிமன்றத்தில் நிலைமை இப்படி இருந்தால், நீதி எப்படி வேகமாகக் கிடைக்கும்?
உயர்நீதிமன்றங்களின் நிலைமையே இப்படி என்றால், அவற்றுக்குக் கீழ் உள்ள மற்ற ஆயிரக்கணக்கான நீதிமன்றங்களின் நிலைமை என்னவோ? அதனால், பாதிப்புக்கு ஆளாகியிருப்போர் எத்தனை கோடிப் பேரோ?
ஜெயலலிதா அரசை மன்னர் ஆட்சிக்கு ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி!
மக்களால் நான்; மக்களுக்காக நான்" என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் ஜெயலலிதா, அதற்கு மாறாக , மக்களை நேரடியாகச் சந்திப்பதுமில்லை; மக்கள் குறைகளை நேரில் கேட்பதுமில்லை சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதா அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா, மக்களாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட - மக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளித்திடும் பொறுப்பு வாய்ந்த முதலமைச்சர் என்பதை மறந்து, தன்னை ஒரு "மகாராணி" யாகக் கற்பனை செய்து கொண்டு அந்தக் களிப்பில் காலம் கழித்து வருகிறார் என்பதைத் தமிழக மக்கள் நன்கறிவார்கள். "மக்களால் நான் ; மக்களுக்காக நான்" என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் ஜெயலலிதா, அதற்கு மாறாக , மக்களை நேரடியாகச் சந்திப்பதுமில்லை; மக்கள் குறைகளை நேரில் கேட்பதுமில்லை.
" நானே மாநிலம் ; நானே எல்லாம் ; எல்லாம் எனக்குத் தெரியும்; என் சொல்லே எதிலும் இறுதிக் கட்டளை" என்ற பாணியில் செயல்படக்கூடிய சர்வாதிகார எண்ணம் கொண்டவர் ஜெயலலிதா. ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களான மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல், சகிப்புத் தன்மை ஆகியவற்றை அலட்சியம் செய்து ஒதுக்கி விட்டு; எதுவும் தன்னைச் சுற்றியே அல்லது தன்னைச் சார்ந்தே இயங்கிட வேண்டும் என்ற தன் முனைப்பும், தன் முக்கியத்துவமும் கொண்டாடுபவர். இத்தகைய குணாம்சங்கள் நிறைந்திருப்பதால்தான் ஜெயலலிதா அரசை மன்னர் ஆட்சிக்கு ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி
தெரஸாவுக்கு புகழாரம்:
அன்பின் ஊற்றாகவும், மனித நேய மாண்பாளராகவும் விளங்கிய அன்னை தெரசாவின் புகழையும் பெருமையையும் போற்றிடும் வகையில் , அவரது நூற்றாண்டு விழாவை 5-1-2011 அன்று திமுக ஆட்சியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியதையும்; சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 15.33 கோடி ரூபாய்ச் செலவில், சுய உதவிக் குழுக்களின் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு நிரந்தர சந்தை வளாகம் கட்டப்பட்டு, அதற்கு அன்னை தெரசா மகளிர் வளாகம் எனப் பெயர் சூட்டியதையும்; ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டத்திற்கு அன்னை தெரசாவின் பெயரைச் சூட்டி, 5 ஆண்டுகளில் 2220 பெண்களின் திருமணங்களுக்கு 4 கோடியே 58 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியதையும்; உயர்வான இந்த நேரத்தில் நினைவு கூரத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.