காங்கிரசா, கம்யூனிஸ்ட்டா.. கருணாநிதியே கன்பியூஸ் ஆகிட்டாரே!
சென்னை: காங்கிரஸ் கட்சியினருக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதற்கு பதிலாக, கம்யூனிஸ்ட்டுகளுக்கு வாக்களிக்குமாறு கருணாநிதி கேட்ட நிகழ்வு இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் அரங்கேறியது.
திமுக கூட்டணிக்கு ஆதரவாக திமுக தலைவர் கருணாநிதி இன்று தேர்தல் பிரசாரத்தை சென்னை, சைதாப்பேட்டையில் ஆரம்பித்தார். வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசிய கருணாநிதியின் வார்த்தைகளில் வழக்கத்துக்கு மாறாக தெளிவு குறைந்து காணப்பட்டது.
சென்னை வெள்ளம் குறித்து ஆளும் கட்சியை குற்றம்சாட்டி பேசிய கருணாநிதி, செம்பரம்பாக்கம் ஏரி நீரை திறந்துவிட்டு விட்டார்கள் என்பதற்கு பதிலாக, செம்பரம்பாக்கம் ஏரி உடைந்தது என்று குறிப்பிட்டார்.
அதேபோல, பேச்சின் இறுதியில் "எனக்கு ஆதரவு தாருங்கள். எனக்கு என்றால் தனிப்பட்ட எனக்கல்ல. திமுக கட்சிக்கு ஆதரவை தாருங்கள். அதேபோல கூட்டணியிலுள்ள கம்யூனிஸ்ட்..." என்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அருகே அமர்ந்திருந்த தயாநிதி மாறன் மற்றும் சில திமுக நிர்வாகிகள், காங்கிரஸ்.. காங்கிரஸ்.. என சத்தமாக கூறினர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆதரவு தாருங்கள்.. என்று திருத்தி பேசினார் கருணாநிதி. அவர் பேசுகையில் சில வார்த்தைகள் புரியாத அளவுக்கு நாக்கு குழறியதை கவனிக்க முடிந்தது. வயோதிகம் காரணமாக அவரது டிரேட் மார்க்கான ஞாபக சக்தியும், வாக்கு வன்மையும் குறைந்திருப்பதை பத்திரிகையாளர்கள் கவனிக்க முடிந்தது.
அதேநேரம், இந்த தள்ளாத வயதிலும், வேன் மூலமே பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு அவர் வருகை தந்திருந்தார். மேலும், பேப்பரில் எழுதி வைத்து அவர் வாசிக்காமல், சரளமாக அரசை குற்றம்சாட்டி பேசினார் கருணாநிதி.