கரூர்: உண்ணாவிரதப் பந்தலில் மயங்கி விழுந்த அதிமுகத் தொண்டர் பலி
கரூர்: உண்ணாவிரதப் பந்தலில் அதிமுகத் தொண்டர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
18 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமையன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி, ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனையை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்தவகையில், கரூர் மாவட்டம் க.பரமத்தி கடைவீதியில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் தும்பிவாடியைச் சேர்ந்த மாரியப்பன் (65) என்பவர் கலந்து கொண்டார்.
அப்போது, திடீரென உண்ணாவிரதப் பந்தலில் மயங்கி விழுந்தார் மாரியப்பன். உடனடியாக அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.