கதிராமங்கல மக்கள் நினைக்கும் இடத்தில் பேச்சுவார்த்தை.. இறங்கி வந்த கலெக்டர்
கதிராமங்கல மக்கள் விரும்பும் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் விரும்பும் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாதுரை அறிவித்துள்ளார்.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி திட்டங்களுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
வன்முறை சம்பவத்திற்கு பின் இரண்டாவது நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மக்கள் சென்னையிலும் இன்று தலைமை அலுவலகம், ஆளுநர் மாளிகை, பாஜக அலுவலகம் ஆகிய இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர் என தகவல் சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாதுரை, கதிராமங்கல மக்கள் விரும்பும் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஓஎன்ஜிசியிடம் இருந்து நஷ்டஈடு பெற்று தரப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்துள்ளார். கதிராமங்கலத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.