ஓஎன்ஜிசியை எதிர்த்து 9வது நாளாக கதிராமங்கலத்தில் தொடரும் கடையடைப்பு
ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலம் கிராமத்தில் நடைபெற்று வரும் கடையடைப்பு 9வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.
தஞ்சாவூர்: ஓஎன்ஜிசிக்கு எதிராகவும், போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் 9 நாட்களாக கதிராமங்கலம் கிராமத்தில் தொடர்ந்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கிறது ஓஎன்ஜிசி. கடந்த 30 ஆம் தேதி விளைநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது.
இதனால், பதற்றமடைந்த கிராமத்து மக்கள் அனைவரும் சம்பவ இடத்தில் குவிந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் 9 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து, கைது செய்தவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் வணிகர்கள் வெள்ளிக்கிழமை முதல் முழுகடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என வணிகர்கள் அறிவித்து இந்தப் போராட்டத்தை 9வது நாளாக இன்றும் நடத்தி வருகின்றனர்.
இதற்கு ஆதரவு அளித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி மாணவரகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.