சிறையிலிருந்து நடக்கப் போகும் ஆட்சி.. வாழ்த்துகள் தமிழர்களே.. கட்ஜு சாட்டையடி!
சென்னை: உலகத் தமிழர்களைப் போலவே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கும் கூட சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை சகித்துக் கொள்ள முடியவில்லை போலும். அடுத்தடுத்து இந்த அமைச்சரவையை விமர்சித்துப் பதிவு போட்டுள்ளார்.
கட்ஜு போட்டுள்ள இன்னொரு முகநூல் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
சிறையிலிருந்து நடக்கப் போகும் அரசு அமைந்துள்ளது தமிழகத்தில். சிறைக்குப் போகும் முன்பு சசிகலா தனது உறவினர் தினகரனை, அவர் ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர், பொறுப்பில் நியமித்து விட்டுப் போயுள்ளார். அவரை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளார். அவரே பொதுச் செயலாளராகவும் நீடிக்கிறார். இப்போது அவர்களது கைப்பாவை பழனிச்சாமி அடுத்த முதல்வராகியுள்ளார்.
எனவே தமிழர்களே, வாழ்த்துகள்!. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, மிகப் பெரிய ஊழல்செய்து தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி, சிறைக் கம்பிகளுக்கு பின்னாலிருந்து உங்களை ஆட்சி செய்யப் போகிறார். சிறையிலிருந்து வரும் உத்தரவுகளை பழனிச்சாமி அப்படியே செயல்படுத்துவார்.
ஆனால் கவலைப்படாதீர்கள் தமிழர்களே. உங்களுக்கு முன்பு ஒரு மாநிலத்தில் இதுபோல நடந்த முன்னுதாரணம் இருக்கிறது. நீங்கள் தாமதம்தான் என்று கூறியுள்ளார் கட்ஜு.
கட்ஜு சொல்வதிலும் என்ன தவறு இருக்கிறது.. இவர்களைத் தேர்ந்தெடுத்தவர்கள் நாம்தானே.. தலை நிமிர்ந்தா நிற்க முடியும்!