வெள்ளத்தில் தவிக்கும் கேரளாவின் பக்கம் "பார்வை"யைத் திருப்பும் இஸ்ரோ சாட்டலைட்டுகள்!
கேரளாவில் வெள்ள மீட்பு பணிகளில் உதவுவதற்காக இஸ்ரோ களமிறங்கி உள்ளது.
Recommended Video
சென்னை: கேரளாவில் வெள்ள மீட்பு பணிகளில் உதவுவதற்காக இஸ்ரோவும் களம் இறங்கியுள்ளது. ஐந்து செயற்கைக் கோள்கள் மூலம் துல்லியமான படங்களைப் பெற்று எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு அதிகம என்பதைக் கண்டறிவதில் இஸ்ரோ உதவி வருகிறது.
கடந்த மூன்று வாரமாக கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
கேரளா வெள்ளத்திற்கு இதுவரை 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஐந்து செயற்கைகோள்கள்
இந்த நிலையில் கேரள வெள்ள மீட்பு பணிகளில் இஸ்ரோவும் உதவிக் கரம் நீட்டியுள்ளது. இதற்காக தனது ஐந்து செயற்கைக் கோள்களை அது பயன்படுத்தி வருகிறது. இந்த செயற்கைகோள்கள் அனைத்தும் கேரள வெள்ளப் பகுதிகள் குறித்த "ரியல் டைம்" படங்களை தொடர்ந்து அனுப்பி வருகின்றன.
என்ன செயற்கைகோள்கள்
ஓஷன்சாட்-2, ரிசோர்ஸ்சாட்-2, கார்டோசாட் 2, கார்டோசாட் 2ஏ, இன்சாட் 3டிஆர் ஆகிய ஐந்து செயற்கைகோள்களும் கேரள வெள்ளம் குறித்த படங்களை அனுப்பி வருகின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகள் குறித்த துல்லியமான படங்களை அவை அனுப்புகின்றன. இதை கேரள அரசுக்கு இஸ்ரோ அனுப்பி உதவுகிறது. இதன் அடிப்படையில் கேரள அரசு அதிகம் பாதித்த பகுதிகளில் தீவிர கவனம் செலுத்த முடிகிறது.
எப்படி உதவுகிறது
இந்த சாட்டிலைட்டுக்கள் கேரளாவில் நிலவி வரும் வானிலை, தண்ணீர் எங்கு எல்லாம் தேங்கி இருக்கிறது, இனி எப்போது மழை வரும், எங்கு வெள்ளம் அதிகமாக இருக்கிறது, எங்கு மக்கள் அதிக அளவில் மாட்டி இருக்கிறார்கள் என்பது குறித்த டேட்டாக்கள், புகைப்படங்களை அனுப்பி வைக்கின்றன. இது அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குப் பேருதவியாக இருக்கும்
வேகமாக செயல்படும்
இன்சாட் 3டிஆர் என்பது இந்தியாவின் அதி நவீன வானிலை ஆய்வு செயற்கைக் கோளாகும். சமீபத்தில்தான் இது செலுத்தப்பட்டது. கேரள வானிலை குறித்த தகவல்களை ஹைதராபாத்தில் உள்ள தேசிய ரிமோட் சென்சிங் மையத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன் பின்னர் கேரள அரசுக்கு அறிவுறுத்தல்கள் போகின்றன.
மிதவைகளும் உதவுகின்றன
இதுதவிர அரபிக் கடலில், தேசியக் கடலியல் தகவல் சேவை மையத்தின் சார்பில் 13 ஆய்வு மிதவைகள் போடப்பட்டுள்ளன. இவை கடல் தட்பவெப்ப நிலை, அலைகளின் வேகம், கடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தகவல்களை மையத்திற்கு அனுப்பும். இதன் அடிப்படையில் எங்கு அலை அதிகம் இருக்கிறது. எந்தப் பகுதியில் கடல் நீர் அதிக அளவில் உட்புகலாம் என்பது உள்ளிட்ட முன்னறிவிப்புகளை கேரள அரசுக்கு வழங்குகிறார்கள்.
மொத்தத்தில் இஸ்ரோவும், அறிவியலும், தண்ணீரில் தத்தளித்து வரும் கேரளாவுக்கு பல்வேறு வழிகளில் உதவி வருகின்றன.