கேரளா வெள்ளம்: ஒருமாத சம்பளத்தை அளிக்கும் அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள்!
கேரளா வெள்ளத்திற்கு நிவாரணமாக அதிமுக எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்குவார்கள்.
சென்னை: கேரளா வெள்ளத்திற்கு நிவாரணமாக அதிமுக எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இந்த நூற்றாண்டிலேயே இல்லாத அளவிற்கு பெரிய மழை பெய்துள்ளது. இதனால் கடந்த ஒருவாரமாக பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது..
அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ஆனாலும் லட்சக்கணக்கில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை கேரளா வெள்ளத்திற்கு 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அதிமுக எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவுவதற்காக கேரளா முதல்வரின் நிதிஉதவி வங்கி கணக்கிற்கு இது அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக எம்எல்ஏக்கள் 1,05,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். எம்பிக்களை இரண்டு லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள். இந்த நிலையில் இந்த ஒரு மாத சம்பளத்தை அவர்கள் கேரளாவிற்கு அளிக்க உள்ளனர்.
ஏற்கனவே தமிழக அரசு கேரளாவிற்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. அதேபோல் நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி ஆம்ஆத்மீ எம்எல்ஏக்கள், குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி அவர்கள் ஒருமாத சம்பளத்தை அளித்தது குறிப்பிடத்தக்கது.