இலங்கையில் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்ய கேரளா ஒப்பந்தம்: பழ. நெடுமாறன் 'திடுக்' தகவல்
கம்பம்: தமிழகத் தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக இலங்கையில் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்ய கேரளா ஒப்பந்தம் போட்டிருப்பதாக தமிழர் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் காய்கறிகளில் அதிகமான அளவு நச்சுத்தன்மை இருப்பதாக கூறி கடந்த 2 மாதங்களாக தமிழகப் பகுதிகளிலிருந்து காய்கறிகளை கேரளாவுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தின் காய்கறிகளுக்கு தடை விதிக்கும் கேரள அரசின் இந்தப் போக்கை கண்டித்து தமிழர் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பழ. நெடுமாறன் கூறியதாவது:
முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை பெறும் தமிழக விவசாயிகள், தமிழகத்தில் விளையும் காய்கறிகளையும், இறைச்சிகளையும் கேரளாவுக்கு தொடர்ந்து அனுப்பி வருகின்றனர். எங்களுக்கும், கேரளா மக்களுக்கும் எவ்வித மனக்கசப்பும் இல்லை.
ஆனால் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் நியாயமாக வந்த தீர்ப்பால் கேரளா அரசியல்வாதிகள், தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்படும் காய்கறிகளில் 95 சதவிகிதமான காய்கறிகள் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றன என்ற பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.
காய்கறிகளில் இருக்கும் நச்சுத்தன்மையின் அளவை யாராலும் கண்டுபிடித்துவிட முடியாது. பயிர்கள் விதைக்கப்பட்ட காலம், பூச்சி மருந்துகள் அடிக்கப்பட்ட நேரம், அவை அறுவடையான காலம் ஆகியவற்றை கணக்கிட்டுத்தான் நச்சுத்தன்மையின் அளவை கணக்கிட வேண்டும். அதனையும் துல்லியமாக கணக்கிட முடியாது. இதன் மூலம் கேரளா அரசு போலியான வாதத்தை தமிழக விவசாயிகளுக்கு எதிராக வைக்கிறது.
டெல்லியிலிருக்கும் கேரளா உயர் அதிகாரிகள், இலங்கை அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, இலங்கையிலிருந்து காய்கறிகளை இறக்குமதி செய்யும் நோக்கில்தான் தமிழக விவசாயிகளின் காய்கறிகளை புறக்கணிக்கும் செயலை செய்கின்றன என நான் பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறேன். பிரதமர் மோடி இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு தமிழக விவசாயிகளுக்கு நியாயம் வழங்க முன்வர வேண்டும்.
தமிழக அரசு உடனடியாக கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, காய்கறிகளை கொண்டு செல்வதை தடுக்கும் செயலுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் சாலைகளில் கொட்டப்பட்டு கேரளாவுக்கு எதிர்ப்பை விவசாயிகள் பதிவு செய்தனர்.