தமிழகத்துக்குள் பாயும் நதிகளின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா? ஓ.பி.எஸ்.கண்டனம்
கேரள அரசின் தடுப்பணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழகத்துக்குள் பாயும் ஓகேனக்கல், பவானி, பாலாற்றின் குறுக்கே அண்டை மாநிலங்கள் அணைகள் கட்டுவதற்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக அரசு ஓகேனக்கல் அருகே தடுப்பணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆந்திர அரசும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சி செய்கிறது. பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணியைத் தொடங்கிவிட்டது.
அண்டை மாநிலங்களின் இந்த நடவடிக்கையால் தமிழகத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய நான்கு மாவட்டங்களின் குடிநீர் தேவை பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்.
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தேக்குவட்டை தடுப்பணையைக் கட்டி முடித்துவிட்டு, மஞ்சக்கண்டியில் அடுத்த அணை கட்டும் பணியைத் தொடங்கியிருக்கிறது. காவிரியின் துணை நதியான பவானி ஆற்றின் குறுக்கே மொத்தம் 6 தடுப்பணைகளைக் கட்ட கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை விஸ்ரூபம் எடுக்கக்கூடும்.
எனவே, மத்திய அரசு இனியும் தாமதிக்காமல், கேரள அரசின் தடுப்பணைகள் கட்டும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், தமிழக மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தடையின்றி கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். சம்பந்தபட்ட கேரள, கர்நாடக மற்றும் ஆந்திர அரசுகள், தங்கள் தடுப்பணை கட்டும் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.