தமிழ்த் தாயைக் காணோம்.. மோனோ ரயிலைக் காணோம்.. பாலத்தையும் காணோம்.. கவலையில் மதுரை!
மதுரை: மதுரை மக்களுக்கு "அல்வா" கொடுத்து விட்டது தமிழக அரசு.. இப்படித்தான் மதுரையில் பேசிக் கொள்கிறார்கள். காரணம், மதுரையின் வளர்ச்சியையும், சுற்றுலா மேம்பாட்டையும் மனதில் கொண்டு அறிவிக்கப்பட்ட எந்தத் திட்டமும் தற்போது சாத்தயமில்லை என்று கூறி கைவிடப்பட்டு விட்டதாக பேச்சு அடிபடுகிறது.
அதிகாரிகள் மட்டத்திலேயே இவ்வாறு பேசப்படுவதால், மதுரை மக்கள் கடும் கோபத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர். மதுரை மக்கள் அதிகம் எதிர்பார்த்தது போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கக் கூடிய மோனோ ரயில் திட்டம் மற்றும் கோரிப்பாளையம் பாலம் திட்டம் ஆகியவற்றைத்தான். ஆனால் இரண்டையும் அரசு அதிகாரிகள் தூக்கி கிடப்பில் போட்டு விட்டதாக சொல்கிறார்கள்.
இரண்டையும் அமைப்பது சாத்தியமில்லாதது என்று ஆய்வுக்குப் பின்னர் அதிகாரிகள் கூறியுள்ளதாக சொல்கிறார்கள். இதனால் அரசும் அமைதியாக இருக்கிறதாம்.
இதை விட முக்கியமான ஏமாற்றமாக மதுரை மக்கள் கருதுவது தமிழ்த் தாய் சிலையைத்தான். குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குப் போட்டியாக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டதுதான் ரூ. 120 கோடி மதிப்பிலான தமிழ்த் தாய் திட்டம்.
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை பாணியில் நீருக்கு நடுவே இந்த சிலையை நிறுவப் போவதாக அரசு அறிவித்தது. இதற்காக பல நீர் நிலைகளையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மதுரை வண்டியூர் தெப்பக்குளமும் கூட ஆய்வு செய்யப்பட்டது. கடைசியில் எதுவுமே சரியில்லை என்று அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பி விட்டனராம்.
அதேபோல கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒரு பிரமாண்ட பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் பாதியிலேயே புட்டுக் கொண்டு விட்டது. என்ன ஆனது இந்தத் திட்டம் என்றே தெரியவில்லை என்கிறார்கள். இதே கதிதான் மோனோ ரயில் திட்டத்திற்கும் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
மதுரையில் என்னப்பா நடக்குது??