நெல்லை: குழந்தையை கடத்தி விற்ற 2 பெண்கள் உட்பட 7 பேர் கைது
ஆலங்குளத்தில் குழந்தையை கடத்தி விற்ற 2 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் குழந்தையை கடத்தி விற்ற 2 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கீழப்பாவூரைச் சேர்ந்த அருணாச்சலம் - தேவிகா தம்பதியிடம் ரூ.2.5 லட்சத்துக்கு குழந்தை விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்டு ஒரு மாதத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஆலங்குளம் அருகே உள்ள கீழப்பாவூர் நேரு நகரை சேர்ந்த தங்கையா மகன் அருணாசலம்,35,கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தேவிகா,33. இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு திருமணம் நடந்தது. குழந்தை ஏதும் இல்லாததால் குழந்தைக்காக ஏங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் குழந்தை இல்லாத குறையை போக்க தத்தெடுக்க முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தனது உறவினரான கீழபாவூரை சேர்ந்த சுடலையாண்டி மகன் நயினார்,42 என்பவரிடம் தெரிவித்தனர். இது சம்பந்தமாக நயினார் ஆலங்குளம் ஆர்சி தெருவை சேர்ந்த அருணாசலம் மகன் ஆறுமுகம்,55 என்பவரிடம் குழந்தை ஏதும் இருந்தால் தெரிவிக்கும் படி விசாரித்துள்ளார். பெண் குழந்தை என்றால் 1.5 லட்சம் ரூபாய் என்றும், பெண் குழந்தை என்றால் 2.5 லட்சம் என்றும் விலை பேசியுள்ளனர்.
ஆண் குழந்தை மேல் ஆசை கொண்ட அருணாசலம் முன்பணமாக 50ஆயிரம் ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் வைத்து கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து சுரண்டை பஸ் நிலையம் அருகே வைத்து 1.10ஆயிரமும், கடையம் ஆவுடையானூர் ரோட்டில் வைத்து ரூ.90 ஆயிரம் என மொத்தம் ரூ. 2.50 லட்சம் பெற்று கொண்டு அக்டோபர் 7ம் தேதியன்று அன்று தொப்பிள் கொடியுடன் கூடிய ஒரு ஆண்குழந்தையை அருணாச்சலத்திடம் கொடுத்துள்ளனர்.
குழந்தை தத்தெடுக்க கூடிய சட்டபூர்வ ஆவணத்தை அருணாசலம் கேட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் தருவதாக கூறி ஆவணம் வழங்காமல் நாட்களை கடத்தியுள்ளனர். வியாழக்கிழமையன்று ஆலங்குளம் வந்த அருணாசலம் ஆலங்குளம் பஸ் நிலையம் அருகே வைத்து நயினாரிடம் ஆவணம் குறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆலங்குளம் போலீசில் இது குறித்து அருணாசலம் புகார் அளித்தார்.
ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் விசாரணை செய்து சிவநாடானூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தங்கபாண்டி,57,சாம்பவர் வடகரையை சேர்ந்த பிள்ளைபெருமாள் மனைவி பொன்னுத்தாய், 67, கடையநல்லூர் ஜிந்தா மதர் மனைவி அருணாச்சல வடிவு (எ) எஸ்தர் ,45, மேலபட்டமுடையார்புறம் தவசி முத்து மகன் பாலசுப்பிரமணியன்,47,கீழப்பாவூர் சுடலையாண்டி மகன் சேர்மன்,49 ஆகிய 7 பேரை கைது செய்தார். குழந்தை ஆலங்குளத்தில் உள்ள விடியல் காப்பகத்தில் ஒப்படைக்கபட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது "நயினாரும், ஆறுமுகமும் சிவநாடானூர் தங்க பாண்டியிடம் ஆண் குழந்தை ஏதும் இருந்தால் கூறும்படி கேட்டுள்ளனர். இது சம்பந்தமாக தங்கபாண்டி பொன்னுத்தாயிடம் கூறியுள்ளார். பொன்னுத்தாய் இது குறித்து கடையநல்லூர் எஸ்தரிடம் கேட்டபோது ராஜபாளையம் தளவாய்புரத்தை சேர்ந்த கோபால் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் கடையநல்லூரை சேர்ந்த செல்வி என்பவர் கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தை பிறந்ததும் யாருக்கும் தெரியாமல் அதனை வேறு யாரிடமாவது குழந்தை இல்லாதவர்களுக்கு கொடுக்கவேண்டும் என கூறியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செல்விக்கு பிறந்த ஆண் குழந்தையை தொப்புள் கொடியுடன் 7-10-16 அன்று அருணாச்சலத்திடம் ஒப்படைத்துள்ளனர். உரிய ஆவணம் இல்லாததால் சந்தேகமடைந்த அருணாசலம் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்துள்ளார். பொண்ணுதாயும், எஸ்தரும் தவறான வழியில் பிறந்த குழந்தைகள் வாங்கி விற்பது , தவறான பழக்கத்தால் உண்டாகும் கர்பத்தை கலைக்க உதவி செய்வது போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதே தொழிலாக உள்ளவர்கள், இது சம்பந்தமாக இருவர் மீதும் தென்காசி, புளியங்குடி, தாழையூத்து ஆகிய காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது என கூறப்படுகிறது.
குழந்தையை கடத்திய குமபலை தென்காசி மாவட்ட மருத்துவமனையில் பரிசோதனை செய்த பின்னர் தென்காசி குற்றவியல் நடுவர் நீதி மன்ற நீதிபதி திருமேனி வீட்டில் ஆஜர் செய்யப்பட்டு பாளை மத்திய சிறைக்கு பாதுகாப்போடு அழைத்து சென்றனர். இந்நிலையில் மேலும் குழந்தை கடத்தலில் ஈடுப்பட்ட 5ஆண்கள் உள்ளிட்ட வர்கள் ஆலங்குளம் போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் ஈரோட்டை சார்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.