போரூர்: பணத்தகராறில் இளைஞர் காரில் கடத்தல்.. ஒருவர் கைது.. மேலும் சிலருக்கு போலீஸ் வலை
பணத்தகராறு காரணமாக இளைஞர் காரில் கடத்தப்பட்டார்.
பூந்தமல்லி: பணத்தகராறு காரணமாக காரில் கடத்தப்பட்ட இளைஞரை போலீசார் மீட்டதுடன், இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதுடன், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
திருத்தணியை சேர்ந்தவர் லிங்கமூர்த்தி 27, இவரது வேலை ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதும் அதில் வாடிக்கையாளர்களை சேர்த்து விடும்தான். தொழில் சம்பந்தமாக இன்று லிங்கமூர்த்தியும் அவரது நண்பர் பாலாஜி 26, ஆகியோரும் போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் இருந்த வினோத்குமார் 26, என்பவரை பார்க்க வந்தனர்.
அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரம் அடைந்த வினோத்குமார் தனது ஆதர்வாளர்களுடன் தயார் நிலையில் வைத்திருந்த காரில் லிங்கமூர்த்தியை தாக்கி காரில் கடத்தி சென்றார்.
இதனைக்கண்டதும் பதறிப்போன பாலாஜி உடனடியாக போரூர் போலீசாரிடம் சென்று நடந்தவற்றை கூறி புகார் அளித்தார். அதன்பேரில் போரூர் உதவி கமிஷனர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன், சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவித்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கடத்தப்பட்ட லிங்கமூர்த்தி திருவள்ளூர் அருகே அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து தனிப்படையினர் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பல் காரில் தப்பி சென்று விட்டது. கடத்தப்பட்ட லிங்கமூர்த்தியை போலீசார் மீட்டனர்.
கடத்தலுக்கு மூளையாக இருந்த வினோத்குமாரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது: ஆன்லைன் தொழிலில் நான் ரூ.3 லட்சம் பணம் கட்டி சேர்ந்தேன். மேலும் எனது நண்பர்களையும் இதில் பணம் கட்டி சேர்த்துள்ளேன். மேற்கொண்டு இந்த தொழிலில் ஆட்களை சேர்க்க முடியாத காரணத்தால் கட்டிய பணத்தை நான் திரும்ப கேட்டார்.
ஆனால் ஒரு முறை கட்டி விட்டால் பணம் திரும்ப கிடைக்காது என்று லிங்கமூர்த்தி கூறி விட்டார். இதனால் பணம் கொடுத்தவர்கள் என்னை தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். அந்த அந்த பணத்தை திரும்ப வாங்கவே சம்பவத்தன்று லிங்கமூர்த்தியை செல்போன் மூலம் சம்பவ இடத்திற்கு வரவழைத்து, ஆட்களை வைத்து கடத்தினேன்" என்றார். வினோத்குமாரிடம் நடத்த விசாரணையின் அடிப்படையில் மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.