கடல் மேல் முகிழ்த்த காதல்... திருமணத்தில் முடிந்தும் நந்தியாய் வந்து நிற்கும் சட்டம்!
நாமக்கல்: கடல் மேல் முகிழ்த்தது இந்த அழகிய காதல்.. இரு மணமும் கலக்க, சுபயோக சுப தினத்தில் திருமணமும் நடந்தேறியது.. ஆனால் இப்போது ஒரு சிக்கல்.. இது நாமக்கல் சுரேஷின் சோகக் கதை.
சுரேஷின் இந்த சோகத்திற்குக் காரணம், அவர் காதலித்துத் திருமணம் செய்த பெண்தான். அப்பெண் பெல்ஜியத்தைச் சேர்ந்தவர். அந்த சட்டம் இந்த சட்டம் என்று திருமணப் பதிவு அதிகாரிகள் இழுத்தடிப்பதால் திருமணத்தை இன்னும் பதிவு செய்ய முடியாமல் தவிக்கிறார் சுரேஷ்.

28 வயதாகும் சுரேஷ் குமார் இத்தாலியில் ஒரு சொகுசுக் கப்பலில் பணியாற்றியபோதுதான் சாராவைச் சந்தித்தார். முதல் பார்வையிலேயே உன் பார்வையில் ஓராயிரம் என்று பாட ஆரம்பித்து விட்டது இருவரின் மனங்களும். காதல் பூத்தது, வேகமாக மலராக மலர்ந்து மனமெல்லாம் இருவரும் ஒருவரை ஒருவர் ஆக்கரமித்துக் கொண்டனர்.
இரு வீட்டிலும் காதலைச் சொன்னபோது இரு வீட்டிலுமே எதிர்ப்புக் கிளம்பின. ஆனால் இரு தரப்பையும் உட்கார வைத்து விளக்கம் கொடுத்ததும் சம்மதம் கிடைத்தது. திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. திருமணமும் நடந்தேறியது. அதன் பிறகுதான் சிக்கல் வந்தது.
சாரா பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் என்பதால் முறையாக அரசு அனுமதியின்றி திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைப் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். ஷிப்பிங் நிறுவனம் ஒன்றில் சமையல் கலைஞராக வேலையில் சேர்ந்தார். இத்தாலியில் சொகுசுக் கப்பலில் பணியாற்றியபோதுதான் சாராவைச் சந்தித்து காதலில் விழுந்தார்.
இதுகுறித்து சுரேஷ் குமார் கூறுகையில், எங்களது திருமணத்திற்கு இரு வீட்டாரின் சம்மதத்தையும் போராடி பெற்று விட்டோம். ஆனால் நாமக்கல்லில் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். எனக்கு வெறுப்பாக இருக்கிறது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், திருமணத்தைப் பதிவு செய்தால் மட்டுமே, சாராவின் விசாவை நீண்ட காலத்துக்கு மாற்ற முடியும். அவரது விசா விரைவில் முடியவுள்ளதால் நாங்கள் தவித்துக் கொண்டிருக்கிறோம். அவர் பெல்ஜியம் போய் விட்டுத் திரும்ப வர வேண்டும். எனவே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டால் சாரா இங்கேயே நீண்ட காலம் தங்க முடியும் என்றார்.
திங்கள்கிழமையன்றுதான் சாரா - சுரேஷ் திருமணம் கொல்லிமலையில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications