ஜல்லிக்கட்டு: கோவையை குலுக்கிய இளைஞர் பட்டாளம்! பல்லாயிரக்கணக்கில் பேரெழுச்சியுடன் திரண்டனர்!!
ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி கோவையில் இளைஞர்கள் பேரணியை நடத்தி வருகின்றனர்.
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி கோவையில் தன்னெழுச்சியாக இளைஞர்கள் ஒன்றிணைந்து பேரணியை நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி இந்த ஆண்டு பொங்கலுக்கு போட்டிகளை நடத்த வேண்டும் என்று கோரி கோவையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டனர். வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் கோவை கொடிசியா மைதானத்தில் இளைஞர்கள் இன்று மாலை ஒன்று கூடினர்.
அவர்கள் அனைவரும், ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், பீட்டாவை ஒழிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், இந்தப் போராட்டம் என்பது ஒட்டு மொத்த கோவை மக்களின் போராட்டம் என்றும் ஜல்லிக்கட்டை ஒழிப்பதன் மூலம் காளை மாடுகளின் இனத்தை அழிப்பதற்கான வேலைகளை மத்திய அரசு செய்து வருகிறது என்றும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினார்கள்.
ஆந்திராவில் தடையை மீறி சேவல் சண்டை நடத்தப்படுகிறது. கர்நாடகத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று தண்ணீர் விடவில்லை. தமிழர்கள் மட்டும் ஏன் ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது. தீபாவளி என்பது நமது பண்டிகையே கிடையாது. அதனை நாம் கொண்டாட வில்லையா? ஆனால் தமிழர்களின் திருவிழா பொங்கலை கொண்டாடுவதற்கு இவ்வளவு நெருக்கடியை மத்திய அரசு ஏன் கொடுக்க வேண்டும் என்று இளைஞர்கள் கேள்வி எழுப்பினார்கள்.