சசியை முதல்வராக தேர்வு செய்வதா? 2 மணிநேரத்தில் பதவியை அடகு வைத்த ஓபிஎஸ்- கேபி முனுசாமி பாய்ச்சல்
சசிகலாவை முதல்வராக தேர்வு செய்த அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலாவை முதல்வராக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி. முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே காவேரிபட்டினத்தில் இன்று செய்தியாளர்களிடம் கே.பி. முனுசாமி கூறியதாவது:
ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர் சசிகலா. அந்த துரோகத்துக்கு சசிகலா பிராயசித்தம் தேட வேண்டும்.
மக்களால் நிராகரிப்பு
பொதுமக்களாலும் அதிமுக தொண்டர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படாதவர் சசிகலா. அவரை முதல்வராக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்தது தவறு. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கார்டனை விட்டு வெளியேற்றுக
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவில் இருந்து சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் வெளியேற்ற வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் தர உள்ளது.
ஆன்மா சாந்தி அடையாது
இந்த நிலையில் திடீரென நடராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நடராஜனின் நடவடிக்கைகள் மர்மமாக இருக்கிறது. சசிகலா முதல்வரானால் ஜெயலலிதா ஆன்மா சாந்தி அடையாது.
துரோகம் செய்த ஓபிஎஸ்
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டார். சசிகலாவை சந்தித்த 2 மணிநேரத்தில் முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் அடகு வைத்ததன் மர்மம் என்ன? என்பதை விளக்க வேண்டும்.
இவ்வாறு கே.பி. முனுசாமி கூறினார்.