அதெல்லாம் ஐடி ரெய்டில் அரசியல் உள்நோக்கம் இல்லை.. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்களே கிருஷ்ணப்ரியா?
வருமான வரி சோதனையில் உள்நோக்கம் இல்லை வழக்கமான ஒன்று தான் என இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தெரிவித்துள்ளார்.
சென்னை : வருமான வரி சோதனையில் உள்நோக்கம் எதுவும் இல்லை இது வழக்கமான ஒன்று தான் என்று இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் 9ம் தேதி சசிகலா குடும்பத்தை குறி வைத்து களமறிக்கப்பட்ட ஆபரேஷன் கிளீன் மணியில் 5 நாட்கள் தொடர் சோதனைக்கு ஆளானது சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக் மற்றும் மகள்கள் கிருஷ்ணப்ரியா, ஷகீலா உள்ளிட்ட 3 பேரும் தான். திங்கட்கிழமை மாலை வரை நீடித்த சோதனையின் முடிவில் சில ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் இவர்கள் வீடுகளில் இருந்து எடுத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணப்ரியா, ஷகீலா, மற்றும் இவர்களின் கணவன்கள் கார்த்திகேயன், ராஜராஜசோழன் உள்ளிட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். வருமான வரி சோதனைக்கு ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணப்ரியா கூறியதாவது :
வருமான வரி சோதனை என்பது வழக்கமான ஒன்று தான் இதில் அரசியல் இருப்பதாக நான் கருதவில்லை. எந்த ஆவணங்களும் என் வீட்டில் இருந்து எடுக்கப்படவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன், ஆவணங்களை சரிபார்ப்பது தானே வருமான வரியின் வேலை அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள் என்றார்.
வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தினகரன், திவாகரன் கூறி வருகின்றனர். இந்நிலையில் அப்படி நான் நினைக்கவில்லை என்று கூறி அவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் கிருஷ்ணப்ரியா.