குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்! லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில், இன்று மகிஷாசுர வதம் நிகழ்த்தப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க சுமார் 4 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சத்தமே இல்லாமல், ஒரு மிகப்பெரிய சக்தி பீடமாக உருவெடுத்து வருவது குலசேகர பட்டிணத்திலுள்ள முத்தாரம்மன் திருக்கோயிலாகும்.
அன்னை உமையவள், இங்கு முத்தாரம்மன் என்ற திருப்பெயரில் எழுந்தருளியுள்ளாள். இங்கு அம்மையுடன், அப்பனும், ஞானமூர்த்தீஸ்வரர் என்ற பெயரில் ஒரே பீடத்தில் எழுந்தருளியுள்ளார். இதுபோன்ற காட்சி வேறு எந்த தலத்திலும் பார்க்க முடியாததாகும். கணவன்-மனைவி ஒற்றுமை, மன நலன், செல்வ வளம் போன்றவை தொடர்பான வேண்டுதல்களை அன்னை நிறைவேற்றுவதாக பக்தர்கள் பரவசமாக தெரிவிக்கிறார்கள்.
கர்நாடகா, குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்பட்டாலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் 10 நாட்களும் தசரா விழா கொண்டாடப்படுவதில்லை. ஆனால் குலசேகரபட்டிணத்தை ஒட்டியுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில், 10 நாட்களும் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பக்தர்கள் மாறு வேடம் பூண்டு, காணிக்கை பிரித்து, கோயிலில் கொண்டு வந்து சேர்ப்பார்கள். வேடம் அணிவதிலேயே அதிகப்படியாக விரதம் இருக்க வேண்டியது காளியம்மன் வேடத்துக்குத்தான். இதற்காக நாற்பது நாட்கள் ஒரே நேரத்து சாப்பாடுடன், மிக கடுமையான விரதம் இருப்பார்கள் பக்தர்கள். இதுதவிர விநாயகர், சிவன், கிருஷ்ணர், அம்மன், முருகன், சுடலைமாடன், போலீஸ், குரங்கு, கரடி, அசுரன் என பல வகையான வேடங்களை அணிந்து பக்தர்கள் விரதம் இருப்பார்கள். இதுபோன்ற வேடம் அணிபவர்கள், தசரா விழா தொடங்கியது முதல் 10 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
செப்டம்பர் 24ல் தசரா விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மகிஷாசுர வதம் நிகழப்போகும், அக்டோபர் 3ம்தேதியான இன்று, அம்மனுக்கு காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 10.30 மணிக்கு மஹா அபிஷேகம் நடக்கும்.
இரவு 11 மணிக்கு சிறப்பு பூஜை அலங்காரத்துடன், அம்மன் சிம்ம வாகனத்தில், குலசேகரன் பட்டிணம் கடற்கரையில் எழுந்தருளுவார். இரவு 12 மணிக்கு மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து குலசேகரன் பட்டிணத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் செல்லத்துரை, நிர்வாக அதிகாரி கணேசன் செய்து வருகின்றனர்.