மணிமண்டபத்தில் அப்துல்கலாம் சிலை அருகே இருந்த பைபிள், குரான் அகற்றம்!
மணி மண்டபத்தில் அப்துல்கலாம் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த புனித நூல்களான பைபிள், குரான் அகற்றப்பட்டன.
ராமேஸ்வரம்: மணி மண்டபத்தில் அப்துல் கலாம் சிலை அருகே குரானும், பைபிளும் வைத்ததற்கு இந்து மக்கள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவற்றை கலாமின் அண்ணன் பேரன் சலீம் அகற்றி அங்கிருந்த கண்ணாடிபேழைக்குள் வைத்தார்.
மக்கள் ஜனாதிபதியான அப்துல் கலாம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் உரையாற்றி கொண்டிருந்த போது திடீரென காலமானார். இதைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான ராமேஸ்வரம் பேக்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் கலாமுக்கு ரூ.15 கோடியில் மணி மண்டபம் கட்டப்பட்டு அதை அவரது நினைவு நாளான கடந்த 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். மணி மண்டபத்தினுள் கலாம் வீணை மீட்டுவது போன்ற சிலை அருகே பகவத் கீதை நூலை அவர் வைத்திருப்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டது.
இது பாஜகவின் இந்துத்துவ திணிப்பு என்று வைகோ உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கலாமின் அண்ணன் பேரன் சலீம் அவரது சிலை அருகே பைபிள், குரானையும் சேர்த்து வைத்தார். அப்போது கலாம் எல்லாருக்கும் பொதுவானவர் என்பதால் மும்மதத்தினரின் புனித நூல்களும் இருக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் குரான், பைபிள் வைத்ததற்கு இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அவற்றை சலீமே எடுத்து சிலைக்கு பின்ப்புறம் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் வைத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications