குற்றால அருவியில் குறைந்த நீர் வரத்து.. வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் 'காக்கா குளியல்'!
நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவியிலும் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் காத்திருந்து நீராடிச் செல்கின்றனர்.
குற்றாலம் : தென்மேற்குப் பருவமழை தொடங்கி ஒரு வாரமாகியும் குற்றால அருவியில் நீர் வரத்து குறைந்துள்ளதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் நீராடிச் செல்கின்றனர்.
கேரளாவை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்ப் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு முன்னர் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இதனால் குற்றாலத்திலும் சாரல் மழையுடன் குளு குளு சீதோஷன நிலை நிலவியதால் சீசன் தொடங்கியதாக வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால் பருவமழை தொடங்கிய போது எதிர்பார்த்த அளவு மழையில்லாததால், குற்றாலம் மெயினருவி,ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளுக்கு போதிய தண்ணீர் வரவில்லை. விடுமுறையை உற்சாகத்தோடு களிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீர் வராததால் சோர்வடைந்தனர்.
எனினும் அருவியில் லேசாக கொட்டும் நீரிலாவது நீராடிச் செல்லாம் என்ற ஆசையில் சுற்றுலாவாசிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து ஆண்கள், பெண்கள் என தனித்தனியே குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
குற்றால அருவியில் குறைந்த நீர் வரத்து.. வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் 'காக்கா குளியல்'! pic.twitter.com/EpxHSUC2EH
— Oneindia Tamil (@thatsTamil) June 10, 2017
சீசன் தொடங்கி 10 நாட்களாகியும் போதிய அளவு மழையின்றி அருவியில் நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் போலவே உள்ளூர்வாசிகள் மற்றும் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.











Click it and Unblock the Notifications