மருத்துவக் கல்லூரியில் சீட் பெற்றுத் தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி- பெண் கைது!
சென்னை: சென்னையில் மருத்துவ படிப்பிற்கு இடம்பெற்று தருவதாக கூறி 30 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசித்து வருபவர் இளங்கோவன். இவருடைய மகள் நித்யஸ்ரீ. இவர் 2012-13 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 1,144 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.
அவருக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான இடத்தினைப் பெற்றுத் தருவதாக கூறி சென்னையைச் சேர்ந்த ரேணுகா என்கிற லிடியா ராயன் என்ற பெண்மணி ரூபாய் 30 லட்சம் பணம் பெற்றுள்ளார்.
ஆனால், நித்யஸ்ரீக்கு மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கித் தராமலும், பணத்தை திருப்பி தராமலும் இருந்துள்ளார்.
இதுதொடர்பாக இளங்கோவன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரி நசிருதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரேணுகாவை நேற்று கைது செய்தார்.
கைது செய்யப்பட்ட ரேணுகா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ரேணுகா ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த ஞானசேகர் ஆகியோரிடம் மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து, சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.