சென்னையில் ஷாக்.. பெண் டாக்டரைக் கொல்ல முயன்ற கூலிப்படை.. தொழில் போட்டியால் விபரீதம்!
சென்னை பெரம்பூரில் தொழில்போட்டி காரணமாக பெண் மருத்துவரை கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சென்னையில் தொழில்போட்டி காரணமாக முன்னணி மகப்பேறு சிகிச்சை பெண் மருத்துவர் ரம்யாவை கொலை செய்ய முயற்சித்த மருத்துவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள படேல் ரோட்டில் வசித்து வருகிறார் பிரபல குழந்தைப் பேறு சிகிச்சை நிபுணர் டாக்டர் ரம்யா ராமலிங்கம். இவர் பணி முடிந்து நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார். வாசலில் காரை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல முயன்ற போது சாலையில் புர்கா அணிந்து நின்ற நபர் ஒருவர் டாக்டர் ரம்யாவை கத்தியால் தாக்கியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து பைக்கில் இருந்த மேலும் 2 பேரும் ரம்யாவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். கத்திக்குத்துக்கு ஆளான ரம்யாவின் அலறல் சத்தம் கேட்டு குடியிருப்புப் பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் அம்பலம்
பிரபல மருத்துவரை கொல்ல நடந்த முயற்சி குறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தொழில் போட்டி காரணமாக அமைந்தகரையில் சென்னை குழந்தைப் பேறு மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் விஎம் தாமஸ் என்பவர் கூலிப்படைகளை ஏவி ரம்யாவை கொல்ல முயன்றது தெரிய வந்துள்ளது.
கூலிப்படையை ஏவி கொல்ல முயற்சி
இதனையடுத்து தனிப்படை போலீசார் டாக்டர் தாமஸ், அவருடைய மருத்துவமனை ஊழியர்கள் யோனா, சத்யகலா, பவானி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த முகிலன், பழனிசாமி உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். தாமஸ் எண்ணூரைச் சேர்ந்த கூலிப்படைக்கு பணம் கொடுத்து இந்த கொலைக்கு திட்டமிட்டுள்ளார்.
நோயாளிகள் குறைந்ததால் ஆத்திரம்
குழந்தைப் பேறு மருத்துவத்தில் சிறந்து விளங்கும் டாக்டர் ரம்யா 3 ஆண்டுகளாக டாக்டர் தாமஸ் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். அண்மையில் ரம்யா கோயம்பேட்டில் ஜுவன் மித்ரா குழந்தைப் பேறு மருத்துவமனையைத் தொடங்கியுள்ளார். ரம்யாவின் இந்த புதிய மருத்துவமனையால் தாமஸ் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தனிப்படையினருக்கு கமிஷனர் பாராட்டு
இதனால் ரம்யாவை மீண்டும் தன்னுடைய மருத்துவமனைக்கே வந்துவிடும்படி தாமஸ் கூறியுள்ளார். ஆனால் இதற்கு ரம்யா மறுப்பு தெரிவிக்கவே, ஆட்களை ஏவி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை முயற்சி சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படையினரை சென்னை மாநகர காவல் ஆணையர் பாராட்டியுள்ளார்.