நீதித்துறையில் ஊழல்... ஒழிக்கக் கோரி வக்கீல்கள் "திடீர்" போர்க்கொடி.. ஆளுநரிடம் மனு
சென்னை: நீதித்துறையில் ஊழல் மலிந்து விட்டதாகவும், அதை ஒழிக்கக் கோரியும் திடீரென வக்கீல்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதுதொடர்பாக தமிழக ஆளுநர் ரோசய்யாவை நேரில் சந்தித்து மனு ஒன்றையும் அவர்கள் அளித்துள்ளனர்.
இதுவரை காவல்துறை - வக்கீல்கள் இடையேதான் எப்போதும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. இப்போது அது நீதித்துறைக்குள்ளேயே புதிய மோதலை உருவாக்க ஆரம்பித்துள்ளது.

காரணம், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதலாவது பெஞ்ச் பிறப்பித்த ஒரு அதிரடி உத்தரவுதான். வக்கீல்கள் சிலர் கோர்ட் ஹாலில் புகுந்து உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதலாவது பெஞ்ச் தாமாக முன்வந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது.
அத்தோடு சில அதிரடி உத்தரவுகளையும் நீதிபதிகள் பிறப்பித்தனர். வக்கீல்களின் செயல்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதன்படி இனிமேல் சென்னை உயர்நீதிமன்றம், மற்றும் மதுரை கிளை ஆகியவற்றில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரை நிறுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இது வக்கீல்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை போலீஸார்தான் பாதுகாப்பு அளித்து வந்தனர். ஆனால் போலீஸாரை வக்கீல்கள் சுத்தமாக மதிப்பதே இல்லை. ஏளனமாக பார்ப்பதுதான் அவர்களது இயல்பாகும். அதுவும் கோர்ட்டுக்குள் போலீஸார் சந்திக்கும் அவமானங்களைப் பற்றி பல நூறு புத்தகங்கள் போடலாம்.
இப்படிப்பட்ட சூழலைக் கருத்தில் கொண்டே மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரை நியமிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவால் வக்கீல்க் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். ஆனால் நேரடியாக இதைக் காட்ட முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில்தான் இன்று திடீரென நீதித்துறையில் நிலவும் ஊழலை ஒழிக்கக் கோரி என்ற பெயரில் ஆளுநர் ரோசய்யாவை வக்கீல்கள் சந்தித்துப் புகார் கொடுத்துள்ளனர்.

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வக்கீல்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு ஆளுநர் மாளிகைக்குச் சென்று இதுதொடர்பாக புகார் மனு கொடுத்தனர். இதன் நகலை குடியரசுத் தலைவருக்கும் அவர்கள் அனுப்பியுள்ளனர்.
நீதிபதிகளுடன் மோத வக்கீல்கள் தயாராகி வருவதையே இது காட்டுவதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications