சுதந்திர தினத்தன்று மேட்டூர் ரயிலை குண்டு வைத்து தகர்ப்போம்: ஐஎஸ்ஐஎஸ் பெயரில் எச்சரிக்கை
சேலம்: சுதந்திர தினத்தன்று மேட்டூர் சரக்கு ரயிலை குண்டு வைத்து தகர்க்க இருப்பதாக சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படைக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பெயரில் மிரட்டல் கடிதம் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படைக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் அனுப்பியதாக மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அதில் வரும் சுதந்திர தினத்தன்று மேட்டூரில் இருந்து சேலம் வரும் சரக்கு ரயில் குண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல் விடப்பட்டிருந்தது. மேலும் அக்கடிதத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாநிலச் செயலாளர் என்றும் போடப்பட்டிருந்தது.
மேலும், இந்தத் தாக்குதல் மேட்டூருக்கும், சேலம் ரயில் நிலையத்திற்கு இடையே நிகழ்த்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் கடிதத்தை சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இந்த மிரட்டல் கடிதம் கோவிலூர் கிராமத்தில் இருந்து அனுப்பப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலூரில் ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த 15 பேர் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மேட்டூர் அருகே உள்ள தங்கமாரிப்பட்டனத்தி்ல் இந்த ஐஎஸ் அமைப்பு செயல்படுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை உதவி கமிஷ்னர் கோவிந்தராஜ் கூறுகையில், ‘எங்களுக்கு இந்தக் கடிதம் கடந்த வெள்ளியன்று கிடைத்தது. கோவிலூர் கிராமத்தில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த மிரட்டல் கடிதத்தை நாங்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம்' என்றார்.
தொடர்ந்து இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.