கட்டக் கடைசியாக தேமுதிகவை வளைத்துப் போடும் முயற்சியில் பாஜக, காங்
சென்னை: வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் தேமுதிகவை தங்களது கூட்டணிக்கு கொண்டு வர காங்கிரஸும், பாஜகவும் இறுதி கட்ட மறைமுகப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இதில் சின்னக் கவுண்டர் சிக்குவாரா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது..
அதிமுக நாற்பது தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தனது தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவும் நேற்று முதல் தனது கட்சி ஆதரவாளர்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை காஞ்சியில் துவக்கி விட்டார்.
திமுகவும் தனது வேட்பாளர் நேர்காணலை நேற்றோடு முடித்து விட்டது. இரண்டு நாட்களில் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் விவரம் மற்றும் தேர்தல் அறிக்கை போன்றவை வெளியிடப்படும் என அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க கடைசி கட்டமாக காங்கிரஸும், பாஜகவும் போட்டிப் போட்டு காய் நகர்த்தி வருகின்றன.
சிங்கப்பூர் பயணம்....
விஜயகாந்த், கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தத் தான் வெளிநாடு பறந்தார் என்றும், இல்லையில்லை மருத்துவ சிகிச்சைக்காகத் தான் சென்றார் என்றும் பல்வேறு தகவல்கள் உலா வந்தன.
உங்களுக்கு தெரியாம கூட்டணியா..?
ஆனால், நேற்று சிங்கப்பூரிலிருந்து திரும்பிய விஜயகாந்தோ ரோம் நகரம் பற்றி எரிந்த போது மன்னன் ஒருவன் இசைக்கருவி இசைத்தது போல, ‘மகனுக்கு லொகேஷன் பார்க்கத் தான் சிங்கப்பூர் போனேன் மக்களே' என கூலாக கூறி விட்டு வீட்டுக்குப் போய் விட்டார்.
கேப்டன் சப்போர்ட் வேணும்....
இதற்கிடையே காங்கிரஸ் கூட்டணிக்கு தேமுதிக வந்தால்தான், காங்கிரஸ் கொஞ்சமாவது தப்பிக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மத்திய உளவுத் துறையும் டெல்லி மேலிடத்துக்கு தகவல் அளித்துள்ளன. எனவே, கேப்டனை கவரும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.
கேப்டன் எங்களுக்குத் தான்...
இதற்கிடையே விஜயகாந்த்துடன், தமிழக பாஜ தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் மற்றும் முன்னணி தலைவர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். ‘ தேமுதிக எங்கள் கூட்டணிக்கு எப்படியும் கொண்டு வந்து விடுவோம்' என்று தமிழக பாஜ தலைவர்கள் பேட்டியும் அளித்தனர்.
சுதீஷுடன் பேச்சுவார்த்தை...
எனினும், தொகுதிகளை பங்கிடுவதில் தேமுதிக, பாஜ, பாமகவுடன் உடன்பாடு ஏற்படாததால் இதிலும் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இதற்கிடையே விஜயகாந்த், சிங்கப்பூர் சென்றிருந்த வேளையில்,அவரது மைத்துனர் சுதீஷ், டெல்லி சென்று பாஜ தலைவர் ராஜ்நாத் சிங்குடன் பேசினார்.
தொலைபேசி விடு தூது...
அதேபோல், காங்கிரஸ் மேலிட தூதர் அகமது பட்டேல் கூறியபடி, தமிழக காங்கிரஸ் தலைவர்களும் சுதீசுடன் பேசி வருகின்றனர். விஜயகாந்த்துடன், அகமது பட்டேலும் தொலைபேசி மூலம் பேசியதாக தெரிகிறது.
ரெண்டு குதிரையில் சவாரி...
வரும் லோக்சபா தேர்தலில்.எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது பற்றி, விஜயகாந்த் விரைவில் முடிவு செய்து அறிவிப்பார் என தேமுதிக தலைவர்கள் கூறிவருகின்றனர். ஆனபோதும், ஒரே நேரத்தில் காங்கிரஸ், பாஜவுடன் விஜயகாந்த் பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.