ராமநாதபுரம் தொகுதியை குறிவைக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி
ராமநாதபுரம்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியை தேசியவாத காங்கிரஸ் கட்சி குறிவைத்து செயல்பட்டு வருகின்றது.
அகில இந்திய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி, தற்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் உள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து தேர்தல் களம் காண்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் இக்கட்சி இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இக்கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது.
இக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக உள்ள டாக்டர் ராஜேஸ்வரனை தான் தற்போது தமிழக தலைவராக அக்கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவார் நியமித்துள்ளார்.
இவர் ஏற்கனவே ராமநாதபுரம் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் என்பதால், இம்முறை களத்தில் இறங்க முடிவு செய்துள்ளராம்.
ஆனால் முன்பு கூட்டணியாக இருந்த காங்கிரஸ் கட்சியும், திமுகவும் பிரிந்து நிற்பதால் தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைத்து களத்தில் இறங்கப் போகின்றது என கேள்வி எழுந்துள்ளது.
வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் களம் இறங்குவதா அல்லது காங்கிரஸ் கூட்டணியில் களம் காணுவதா என அதன் தலைமைக்கு அனுமதி கோரி தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. தலைமையின் அனுமதி கிடைத்தவுடன் கூட்டணி இறுதி செய்யப்படும் என கூறப்படுகின்றது.
கூட்டணியாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ராமநாதபுரத்தில் களம் இறங்கப்போவது மட்டும் உறுதியாம்.