எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ள கோல்டன் பே ரிசார்ட்ஸ்சில் 2 நாட்களாக நடப்பது என்ன?
தமிழக சட்டசபை எம்எல்ஏக்கள் இரண்டு நாட்களாக கோல்டன் பே ரிசார்ட்ஸ்சில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து ஓ.பன்னீர் செல்வம் நடத்திய மவுனப்புரட்சி தமிழக அரசியல் களத்தையே கிடுகிடுக்க வைத்துள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் அரியணையில் அமரப்போவது யார் என்பதுதான் இப்போதைய கேள்வி.
சசிகலா முதல்வராகக்கூடாது என்று தொண்டர்கள் நினைத்தாலும் நிர்வாகிகள் அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் சசிகலா முதல்வராக வேண்டும் என்று விரும்புகின்றனர். நான் முதல்வராக பதவியேற்பேன் என்று உறுதியாக கூறி வருகிறார் சசிகலா. அதற்கேற்ப காய் நகர்த்த தொடங்கியுள்ளார்.
என்ன நடக்கிறது
கூவாத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்ஸ்சில் ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. இங்கே பொழுதை போக்கி வரும் எம்எல்ஏக்கள் வாய்க்கு ருசியான உணவு, கண்களுக்கு குளிர்ச்சியாக நடனம் என அனுபவி ராஜா அனுபவி என்று திகட்ட திகட்ட அளிக்கப்படுகிறதாம்.
யார் கூப்பிட்டாலும் போயிரக்கூடாது
எம்எல்ஏக்களின் செல்போன்களை கைப்பற்றி வைத்துள்ளாராம் டிடிவி தினகரன். யார் கூடவும் பேசக்கூடாது என்று கண்டிசன் போடுகிறாராம் டாக்டர் வெங்கடேஷ். சொர்கம் மாதிரி இருக்கிற நரகம்யா என்று புலம்புகிறார்களாம் எம்எல்ஏக்கள்.
நல்லா சாப்பிடுங்க
சைவமோ அசைவமோ நல்லா சாப்பிடுங்க. கடல் உணவு விதம் விதமாக கிடைக்கிறதாம். ஆனால் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டு போகாத எம்எல்ஏக்களின் பாடுதான் படு திண்டாட்டமாக உள்ளதாம். 30க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு இருக்க முடியவில்லை என்று கூறி உண்ணாவிரதமும் இருக்கிறார்களாம்.
போட்டிங்... மசாஜ்
உற்சாகத்திற்கு போட்டிங் போகலாம்... உடம்புக்கு இதமாக மசாஜ் செய்து கொள்ளலாம், ஜிம்மில் போய் பொழுதை கழிக்கலாம் என உற்சாகமாகவே பொழுது போகிறதாம் பல எம்எல்ஏக்களுக்கு. மொத்தத்தில் இது ஆடம்பர சிறைதான். ஆனாலும் மிஸ்டர் ஆளுநர் இன்னும் ஒரு வாரத்திற்கு எதுவும் சொல்லாதீங்க. இப்படியே ஜாலியே பொழுதை போக்குறோம் என்று எம்எல்ஏக்கள் பேசும் மைண்ட்வாய்ஸ் கிழக்குக் கடற்கரை சாலையை தாண்டி எதிரொலிக்கிறதாம்.
குண்டர் படை
கோல்டன் பே ரிசார்ட்ஸ் பக்கம் யாரும் வந்துற கூடாது என்று கடும் கண்காணிப்பில் இருக்கிறதாம் குண்டர்படை. ஊடகத்திற்கு எந்த அனுமதியும் இல்லை. ஆனாலும் ஒளிந்து மறைந்து சிலவற்றை கேமராவில் சுட்டுக்கொண்டு வந்து விடுகின்றனர். இன்னும் எத்தனை நாளைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடப்போகிறாரோ.
உங்களுக்கு ஒட்டு போட்ட குத்தத்துக்கு எங்களை பரபரப்பா வச்சிருக்கீங்களே என்கின்றனர் வாக்காளர்கள்.