எம்.ஏ தமிழ் படித்து விட்டு விவசாயம் பார்க்கும் சிதம்பரம் தொகுதி வேட்பாளர்
சிதம்பரம்: சிதம்பரம் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள எம்.சந்திரகாசி (45) ஒரு விவசாயி ஆவார்.
இவரது பெற்றோர் பெயர் மாரிமுத்து- வள்ளியம்மை ஆகும். பெரம்பலூர் மாவட்டம், பெருமத்தூரைச் சேர்ந்த சந்திரகாசி ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்.
எம்.ஏ. (தமிழ்)., பி.எல்.ஐ.சி., (நூலக அறிவியல்) படித்துள்ள போதும், விவசாயத்தை தொழிலாக மேற்கொண்டு வருகிறார். இவரது மனைவி பெயர் வனிதா. மகன்- ராம்பாபு (பி.இ. முதலாமாண்டு) மகள்- சசிகலா (12-ம் வகுப்பு).
1988-ம் ஆண்டு அதிமுக உறுப்பினரான சந்திரகாசி, 1998 ஆம் ஆண்டு முதல் 2007 ஆண்டு வரை பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றிய இளைஞரணி இணைச் செயலர் இருந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2007-ல் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளராகவும், 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை வரகூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்த சந்திரகாசி, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பெரம்பலூர் மாவட்ட அதிமுக விவசாயப் பிரிவு செயலராக இருந்து வருகிறார்.