'குதிரை பேர' அதிமுக ஆட்சியில் காவல்துறை செயலிழந்துவிட்டது: மு.க.ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டு
சென்னை: அதிமுக ஆட்சியில் காவல்துறை செயலிழந்து விட்டது மட்டுமின்றி, தமிழகத்தை குற்றபுரியாக மாற்றிக் காட்டியிருக்கிறது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது: தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மான்யத்துறை மீதான விவாதத்தில் பதிலளிக்கும் போர்வையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரம் தாழ்ந்த விமர்சனங்களை இன்றைக்கு முன் வைத்துள்ளார். அவருக்குத் தனது ஆட்சி மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்கவும் தெரியவில்லை, நிரூபிக்க முயலும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களையும் சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்லவும் இயலவில்லை.
எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் ஆளுங்கட்சிக்கு உரம் சேர்ப்பது மட்டுமல்ல, காவல்துறை மேலும் திறமையுடன் செயல்படுவதற்கு அவை உதவும் என்பதை முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்களிடம் கற்றுக் கொண்டவர்கள் நாங்கள். ஆனால், இன்றைக்கு நடைபெற்ற காவல்துறை மான்யத்தின் மீதான பதிலின் மூலம், இதுவரை முதலமைச்சர்கள் போற்றிப் பாதுகாத்து வந்த அரசியல் நாகரீகத்தைத் தூக்கியெறிந்து, தரம் தாழ்ந்த விமர்சனங்களை முதலமைச்சரே பதிவு செய்திருப்பது சட்டமன்ற வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம் என்று எண்ணி வருந்துகிறேன்.
"போதுமான தகவல்கள் இல்லாமலும், அடிப்படை ஆதாரமில்லாமலும் ஒரு விவாதத்தில் ஈடுபடுபவர்கள், அந்த விவாதத்தை தனிப்பட்ட தாக்குதலில்தான் முடிப்பார்கள்", என்றும், "தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகளில் தினமும் பெயர் வருவதற்காக சிறிய பிரச்னைகளை பூதாகரமாக்கி பெரிது படுத்துகிறார்கள்", என்றும் எதிர் கட்சிகளின் ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை எல்லாம் முதலமைச்சர் புறந்தள்ளி, அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற ஆணவத்துடன் பதிலளித்திருப்பது, அந்தப் பதவிக்குரிய கண்ணியத்திற்கு துளியும் சம்பந்தமில்லாமல் இருப்பது கண்டு வேதனைப்படுகிறேன்.
தமிழகத்தில் உள்ள சிறிய பிரச்னைகள் பூதாகரமாக்கப்படுகிறது என்கிறார். முதலமைச்சரின் கண்ணுக்கு இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டு - கைது செய்யப்படுவது, மாட்டிறைச்சிக்குத் தடை கொண்டு வரப்பட்டது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டங்கள், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தாய்மார்கள் நடத்தும் ஆர்பாட்டங்கள், அதில் ஒரு பெண்ணை போலீஸ் ஏ.டி.எஸ்.பி., ஒருவரே கை நீட்டி கண்ணத்தில் அறைந்தது, கதிராமங்களத்தில் மாணவ - மாணவிகள் தங்கள் கிராமத்திற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்காக அணிவகுத்து போராடுவது, அங்குப் போராடிய தாய்மார்கள் மீது காவல்துறையை ஏவி விட்டு தடியடி நடத்தச் சொன்னது, மருத்துவக் கல்வியை இழந்து தவிக்கும் மாணவ - மாணவிகளின் போராட்டங்கள் என எல்லாமே, 'சிறிய பிரச்னைகள்' போல் தெரிந்தால், பிரதான எதிர் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் அதற்கு பொறுப்பாக முடியாது.
இந்த எண்ணவோட்டம் முதலமைச்சருக்கு இருப்பதால்தான், 'தமிழக மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன?', என்றத் தோரணையில் சட்டமன்றத்திலும் விவாதங்களைத் தடுத்து, ஜனநாயக ரீதியில் போராடுபவர்களையும் கைது செய்து, பெண்கள் என்றும் போராமல் காவல்துறையை ஏவி விட்டு தடியடி நடத்தி, மாநில நலன்கள் பற்றி மத்திய அரசுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்காமல், 'ஆனந்த சுகம் கண்டேன்', என்றப் போக்கில் முதலமைச்சர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். "பெண்களை முன்னிறுத்திப் போராடுவது இப்போதெல்லாம் பேஷன் ஆகி விட்டது", என்றுத் தாய்மார்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை நா கூசாமல் கொச்சைப்படுத்திய முதலமைச்சரிடமிருந்து இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.
அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆண்டு 2017. இதில் ஆட்சியின் காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு, 2005ல் வெளியான புள்ளிவிவரங்களை எடுக்கும்போதே, "இந்த 'குதிரை பேர' அதிமுக ஆட்சியில் காவல்துறை செயலிழந்து விட்டது மட்டுமின்றி, தமிழகத்தை குற்றபுரியாக மாற்றிக் காட்டியிருக்கிறது", என்று நான் சட்டமன்றத்தில் வைத்த குற்றச்சாட்டு உண்மையாகிறது. இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.