திருப்பரங்குன்றம் வங்கிக்கு விசிட் அடித்த ஸ்டாலின்.. கியூவில் நின்றவர்களிடம் குறை கேட்டார்
பழைய நோட்டுகளை மாற்ற வங்கியில் வரிசையில் நிற்கும் மக்களிடம் மு.க. ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.
மதுரை: பழைய நோட்டுகளை மாற்ற வங்கியின் வாசலில் காத்திருக்கும் மக்களிடம் குறைகளை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர், வங்கி அதிகாரிகளிடம் விரைந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து அனுப்புமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
ஒரு வாரமாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளின் வாசலில் பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றனர். 10ம் தேதியில் ஆரம்பித்த இந்தப் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு ஏற்படாத நிலை உள்ளது. கூடுதல் பிரச்சனையாக இன்றிலிருந்து பணம் மாற்றுவோரின் விரல்களில் அழியாத மை வைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் சிரமத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்ற மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். திருப்பரங்குன்றம் அருகே உள்ளது நல்லூர். அங்குள்ள ஒரு வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர். அப்போது அங்கு சென்ற மு.க. ஸ்டாலின், காத்திருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால் ஏற்படும் சிரமங்களை ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.
பின்னர், வங்கிக்குள் சென்ற மு.க. ஸ்டாலின் வங்கி அதிகாரிகளிடம் பேசினார். அப்போது, மக்களின் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்யுமாறும் சிரமம் இல்லாமல் வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் அவர் வங்கி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் தமிழக மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். கடந்த ஒரு வாரமாக ஏழை, எளிய நடுத்தர மக்கள் தங்களின் நேரத்தை வங்கி ஏடிஎம் மையங்களின் முன்பு கால் கடுக்க நின்று செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மதுரையை அடுத்த நல்லூரில் உள்ள வங்கிக்கு நேரில் சென்று அங்கு வரிசையில் நின்ற மக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். மத்திய அரசின் முடிவு அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. மக்களுக்கு வங்கிகளில் போதிய பணம் கிடைப்பதற்கு மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக, திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்தில் மு.க. ஸ்டாலின் ஈடுபட்டார்.












Click it and Unblock the Notifications